Saturday, 27 June 2015

தானமும் வியாபாரமும்!



இந்திய அளவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருக்கிறது. பொதுவாக, அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளே மாற்று உடல் உறுப்புகளைப் பெறுவதில் முன்னணியில் இருக்கின்றன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக தொடங்கப்பட்ட மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் மருத்துவர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அரசு மருத்துவமனைகளில் முழு அளவில் செயல்படாமல் போனதுதான் இதற்கான முக்கியக் காரணம்.
தமிழகத்தில் மாற்று உடல் உறுப்புகளைப் பெறும் தனியார் மருத்துவமனைகள் மீது சமீப காலமாகச் சில குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதில் உண்மை இல்லாமல் இல்லை. முக்கியமாக இரு குற்றச்சாட்டுகள்.
முதலாவது, மூளைச்சாவு அடைபவர்களிடமிருந்து உடல் உறுப்புகளைப் பெறுகின்ற தனியார் மருத்துவமனைகளிடம் போட்டி இருக்கிறது. அந்தப் போட்டியானது அக்கறையின் அடிப்படையிலான ஆரோக்கியமான போட்டியாக இல்லாமல் சந்தையுடன் இணைந்த போட்டியாக இருக்கிறது. ஒரு மருத்துவமனையில் நோயாளியிடமிருந்து தானமாகப் பெறப்படும் உறுப்பைப் பெறுவதில், நிச்சயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத்தான் முன்னுரிமை. ஆனால், இப்படித் தானமாகப் பெறப்படும் உறுப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது மற்ற மருத்துவமனைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது, தனியார் மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைபவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தால், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளிடம் வழக்கத்தைவிடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
பொதுவாக, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக உறவினர்கள் தெரிவித்த பிறகு, அதற்குப் பின் அப்படியான நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் நாட்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஒருவேளை அந்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் தள்ளுபடிசெய்யலாம் என்றால், அது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் விருப்பம். ஆனால், ஒருபோதும் அந்தக் கட்டணத்தை உறுப்புகள் பொருத்தப்படும் நோயாளிகளிடம் மறைமுகமாக வசூலிக்கக் கூடாது. அதேபோல, தானமாகப் பெறப்படும் ஒரு உறுப்பு மற்றவர்களுக்கும் தானமாகத்தான் அளிக்கப்பட வேண்டும். உறுப்புக்கு என எந்த மருத்துவமனையும் மறைமுகமாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அது குற்றம்.
இதுபற்றியெல்லாம் யாரும் எழுத்துபூர்வமாகப் புகார் கொடுப்பதில்லை. அப்படிப் புகார் கொடுத்தால், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் நடவடிக்கைக்கு உள்ளாகும்!
டாக்டர் அமலோற்பவநாதன், மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்.



 

மருத்துவம் அல்ல; அன்பே வாழ வைக்கிறது!



மனைவி ஸ்டெபானி, கைக்குழந்தை வயாத்தை அந்த மருத்துவமனையில் நடுநிசியில் விட்டுவிட்டு மனமில்லாமல் பிரிந்தார் ஆஸ்டின் பிளாகர். இத்தம்பதிக்கு வயாத் மூன்றாவது குழந்தை. குழந்தையின் இதயத்தில் இடது பகுதி இல்லை என்பது வயிற்றிலிருந்து கருவை ஸ்கேன் செய்த ஆறாவது மாதத்தில் தெரிந்தது.
பொதுவாக, இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு வலி மறப்பு மருந்துகளைக் கொடுத்து, இயற்கை அதைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும்வரை பராமரிப்பார்கள். குழந்தை அப்படியே பிறக்கட்டுமா அல்லது கருவைக் கலைத்துவிடலாமா சொல்லுங்கள் என்று மருத்துவமனையில் கேட்டார்கள். ஒரு நாள் முழுக்க முடிவுக்கு வர முடியாமல் தவித்த ஸ்டெபானி, “கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த ஜீவனை எனக்குள் அனுப்பியிருக்கிறார். அது பிறக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம்” என்றார். மருத்துவர்களும் சரியென்று கரு நன்கு வளர சிகிச்சை அளித்தார்கள்.
குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் மருத்துவமனைக்கு வரச் சொல்லி, அதன் வலது வென்டிரிக்கிள் வழியாகவே உடல் முழுவதற்கும் ரத்தம் அனுப்பப்படும் வகையில் நார்வூட் அறுவைச் சிகிச்சையைச் செய்தனர். 2 மாதங்களுக்குப் பிறகு வயாத் மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான். செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்திய மருத்துவர்கள், நிறைய மருந்துகளை உட்செலுத்தினார்கள். உடல் எடை 10 பவுண்டுகூட இல்லை. இனி இதய அறுவைச் சிகிச்சை மூலம் அவனைப் பிழைக்க வைக்க முடியாது. புதிய இதயம்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், அதனாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. புதிய இதயத்தை ஏற்காமல் உடல் மறுக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பிறக்கட்டும் என்று முடிவு செய்த ஸ்டெபானி, அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிக்கொண்டிருந்தார்.
இவ்வளவு சிறிய சிசுவுக்கு மாற்று இதயம் எப்படிக் கிடைக்கும், அதற்கான வாய்ப்புகள் என்ன என்று சிந்தித்ததில் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது புரிந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் வேண்டும் என்றால், இன்னொரு குழந்தையின் வாயிலாகத்தான் சாத்தியம். அதுவும் இந்த மருத்துவமனை இருக்கும் இடத்திலிருந்து 1,000 மைல் தொலைவுக்குள் இருக்கும் குழந்தையின் இதயம் கிடைத்தால்தான், அதை அந்த உடலிலிருந்து அகற்றி 4 மணி நேரத்துக்குள் விமானத்தில் கொண்டுவந்து வயாத்துக்குப் பொருத்த முடியும். 4 மணி நேரம் கடந்துவிட்டால் அந்த இதயமும் செயலற்றுவிடும்.
வயாத் போன்ற குழந்தையின் ரத்த வகை, உடல் நிலை, இதயக் கோளாறின் தன்மை, தேவைப்படும் இதயத்தில் இருக்க வேண்டிய அளவு, அம்சம் போன்ற அனைத்தும் கணினியில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால், விபத்து அல்லது வேறு வகையில் இதே வயதுக் குழந்தை இறந்தால் அதன் இதயம் இக்குழந்தைக்குப் பொருந்துமா, பொருந்தாதா என்று சில நிமிடங்களில் தீர்மானித்துவிட முடியும். இதற்காக அமெரிக்கா முழுவதற்கும் பயன்படக்கூடிய தேசிய தகவல் இணைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 2 அல்லது 4 மாதங்கள் மாற்று இதயத்துக்காகக் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். வழக்கமாக இந்தக் காலத்தில் பெற்றோர்கள் தங்களுடைய நம்பிக்கையையும் பொறுமையையும் ஒருசேர இழந்துவிடுகிறார்கள். அப்படிக் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? காலம் பூராவும் செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட சாதனங்களுடன் செயற்கையாகவே வாழவைப்பதா என்ற முடிவைப் பெற்றோர் எடுத்தாக வேண்டும்.
இந்த நிலையில்தான் மாற்று இதயத்தைப் பொருத்துவதற்காக மருத்துவமனையில் வயாத் சேர்க்கப் பட்டான். ஆஸ்டின் பிளாகர் மற்ற இரு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டில் தங்கிவிட்டார். மருத்துவமனையில் ஸ்டெபானி செய்வதற்கு ஏதுமில்லை. சிறிது நேரம் உட்கார்ந்து மகனுடன் பேசிக்கொண்டிருப்பார். அவனைத் தாங்கள் நேசிப்பதையும் அவன் நலமுடன் திரும்பப் போவதையும் கூறி நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருப்பார். அவனுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தினசரி குறிப்புகள் எழுதிவைப்பார். பூரண சுகம்பெற ஜெபமாலை உருட்டி பிரார்த்தனைகள் செய்வார். இப்படியேதான் நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.
ஒரு நாள் ஸ்டெபானியிடம் அந்த நல்ல செய்தியை மருந்துவர்கள் சொன்னார்கள். ஆம், வயாத்துக்கு ஒரு மாற்று இதயம் கிடைக்கப்போகிறது. சிரிக்கக்கூட முடியாமல் அழுதார் ஸ்டெபானி. எங்கிருந்தோ ஹெலிகாப்டரில் வந்தது அந்த இதயம். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், விமானப் போக்குவரத்துத் துறையினர், காவல்துறை, விமான நிலையக்கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் என்று எவ்வளவோ பேரின் உதவி, ஒத்துழைப்பின் விளைவாக அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மாற்று இதயம் பெற்று வயாத் சுவாசிக்கத் தொடங்கினான். அன்றலர்ந்த ரோஜாபோல இருந்த அவனை ஸ்டெபானி இரு வாரங்களுக்குப் பின் தூக்கிக்கொண்டு வீடு திரும்பினார்.
எனினும், கதை இத்துடன் முடியவில்லை. குழந்தைகளுக்குப் பொருத்தப்படும் மாற்று இதயம் அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்குத்தான் வேலை செய்யும். அதற்குப் பிறகு வளர்ந்த மனிதர்களின் இதயம் பொருத்தப்பட வேண்டும். இது அடுத்து, வயாத் எதிர்கொள்ளவிருக்கும் பெரிய சவால். அதற்குள் இன்னும் நிறைய சவால்கள் இருக்கின்றன. அவனுடைய உடல்நிலையை ஒவ்வொரு நாளும் ஸ்டெபானி தம்பதி கவனிக்க வேண்டும். மருத்துவர்கள் சொல்படி ஒவ்வொரு நாளையும் அவன் நகர்த்த வேண்டும். என்றாலும் இதெல்லாம் சாத்தியம்தான். அன்பே உருவான ஒரு பெற்றோர் அவனுக்கு இருக்கின்றனர். உலகில் தங்கள் உயிருக்கு இணையானவர்கள் மரணத்தை நெருங்கினாலும், ஏதேனும் ஒருவகையில் அவர்கள் இந்த பூமியில் வாழ வழிவகை செய்யும், இன்னொரு உயிருக்கு வாழ்வளிக்கும் பெருந்தன்மையாளர்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகை அன்பு ஆளும்போது வயாத்துகள், ஸ்டெபானிகள் நீண்ட காலம் கண்ணீர் விட வேண்டியதில்லை!
©: ‘தி கார்டியன்’

தமிழகமும் உறுப்பு தானமும்!


உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் | கோப்புப் படம்: கே.ஆனந்தன்

இன்றைக்கு இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். பல ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றாலும், ஹிதேந்திரனின் தானம் தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.
சென்னையில் 2008-ல் ஒரு விபத்தில் சிக்கினார் ஹிதேந்திரன். மூளைச்சாவு அடைந்த அவருடைய உறுப்புகளைத் தானம் அளிக்க முடிவெடுத்தனர் அவருடைய பெற்றோர். மருத்துவத் துறையினரோடு காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கை கோக்க, இந்த தானம் மிகத் துரிதமாக யாருக்குத் தேவையோ அவர்களைச் சென்றடைந்தது. ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் எழுத, தமிழகத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வு உருவாகக் காரணமானார் ஹிதேந்திரன். இதன் தொடர்ச்சியாக, மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டது. எண்ணற்றோர் தங்கள் உயிருக்கு நெருக்கமானவர்கள் மரணத்தை நெருங்கும்போது, அவர்களுடைய உடல் உறுப்புகளைத் தானம் அளித்து தங்கள் உயிரானவர்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வை அளிக்கிறார்கள்.’
தமிழகத்தில் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் 8 அரசு மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 2008 அக்டோபர் முதல் மே மாதம் வரை மூளைச்சாவு அடைந்த 528 ஆண்கள், 121 பெண்கள் என மொத்தம் 649 பேரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து மொத்தம் 3,572 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 78 பேரும், கடந்த மே மாதத்தில் மட்டும் 18 பேரும் உடல் உறுப்புகளைத் தானம் அளித்துள்ளனர்.
பொதுவாகவே, அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளே உடல் உறுப்பு தானம் பெறுவதில் முன்னணியில் இருக்கின்றன. இதுவரை மூளைச்சாவு அடைந்து தானம் அளித்துள்ளவர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் 119 பேர்; தனியார் மருத்துவமனைகளில் 530 பேர். அரசு மருத்துவமனைகளில் 244 சிறுநீரக, 4 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 882 சிறுநீரக, 122 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. எல்லை தாண்டியும் தானங்கள் உயிர்களைக் காக்கின்றன. இதுவரை தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் 9 உறுப்புகள் வெளிமாநிலங்களில் சிகிச்சை பெற்றவர்களுக்கும், வெளிமாநிலங்களில் மூளைச்சாவு அடைந்தவர்களின் 13 உறுப்புகள் தமிழகத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சையில் இருந்த ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தை கிளெப்க்கு, கடந்த ஆண்டு பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது ஆண் குழந்தையின் இதயம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது.
இதுவரையிலான பதிவுகளைப் பார்க்கும்போது, இத்திட்டத்தால் பலனடைந்தவர்களில் ஏழைகளின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான். அரசு மருத்துவமனைகளில் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எளிய மக்கள் பலன் அடைய முடியும்! 



தொடுதிரை அடிமைகள்





உங்களிடம் தொடுதிரை மோகம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நோமோ-ஃபோபியா என்ற நோய் இருக்கிறது
ஒரு தமிழறிஞர் என்னிடம் சொன்னார்: “வள்ளுவர் தொட்டனைத்து ஊறும் அறிவு என்று சொல்கிறார். அந்தக் காலத்தில் அவர் தொடுதிரைகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனால், இன்று ஸ்மார்ட்போன் திரையைத் தொட்டால் தகவல்கள் ஊறிப் பெருகி வழிந்தோடுகிறதல்லவா? இப்படியாக வள்ளுவர் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக விளங்குகிறார்”.
அறிஞர் வள்ளுவரைப் பற்றிச் சொன்னதை விட்டுவிடலாம். ஆனால், நாளும் பொழுதும் பகலும் இரவும் உலகெங்கும் கோடிக் கணக்கானோர் குனிந்த தலையும் ஸ்மார்ட்போனுமாகத் திரிகின்றனரே. அந்த அளவுக்கு அவை அவசியமானவைதானா?
உங்களுக்கு நோமோ-ஃபோபியாவா?
கடந்த வாரம் ஹாங்காங்கில் ஒரு கருத்தரங்குக்குப் போயிருந்தேன். அலைபேசிகளை அரங்குக்குள் அனுமதிக்கவில்லை. வரவேற்பறையில் அவற்றை ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். பலரும் மருகி மருகி நின்றார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் அலைபேசிகளை ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள். இப்படி அலைபேசிகளை வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்கள். தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், பலரும் அரங்கத்திலிருந்து பாய்ந்து வெளியேறித் தத்தமது அலைபேசியைக் கைப்பற்றி, அதன்மீது கவிழ்ந்துகொண்டார்கள். உலகெங்கும் இவர்களைப் போல் தொடுதிரை அடிமைகள் இருக்கிறார்கள்.
அலைபேசியை மறந்தாலோ, தொலைத்தாலோ, அதில் சார்ஜ் குறைந்தாலோ, தொடர்பு எல்லைக்கு வெளியே போக நேர்ந்தாலோ சிலர் பதற்றமடைவார்கள். வேறு சிலர் அடிக்கடி அனிச்சையாக ஸ்மார்ட்போனை எடுத்துத் தகவலோ அஞ்சலோ வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள். சிலர் அவசிய மில்லாமல் படம் எடுத்தபடி இருப்பார்கள். சிலர் தாங்கள் பதிவிட்ட நிலைத்தகவலுக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால் நொந்துபோவார்கள். சிலர் எதிரில் யாரேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே போனை எடுத்துப் பார்ப்பார்கள். இது ஒரு நோய். இதற்கு நோமோ ஃபோபியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நோ-மொபைல்-போன்-ஃபோபியா எனபதன் சுருக்கம் இது.
ஸ்மார்ட்போன் என் சேவகன்
இதை நோய் என்றால் ஸ்மார்ட்போன் அபிமானிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களில் பலருக்கும் பாரதிக்குச் சேவகனாய் வாய்த்த கண்ணனைப் போல் அமைந்திருக்கிறது ஸ்மார்ட்போன். அதில் படம் எடுக்கலாம், பாட்டுக் கேட்கலாம், ‘வீடியோ’வில் விளையாடலாம், நூற்றுக் கணக்கான பத்து இலக்க எண்களையும் முகவரிகளையும் சேமித்து வைக்கலாம். நாட்குறிப்பேடாக, கடிகாரமாக, கால்குலேட்டராகப் பயன்படுத்தலாம். இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உலவலாம். குறுந்தகவல்களையும் படங்களையும் காணொளிகளையும் பரிமாறிக்கொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஜி.பி.எஸ். உதவியுடன் இருக்குமிடத்தை அலைபேசி கணித்துக்கொள்ளும். பிறகு, போக வேண்டிய இடத்தைப் பதிவுசெய்தால் அதை வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்.
இவற்றைத் தவிர, இன்னொரு பயன்பாடும் இருக்கிறது. தொலைபேசி என்பது காரணப் பெயர். தொலைவில் உள்ளவர்களோடு பேசும் கருவி. முன்னொரு காலத்தில் தொலைபேசிகள் அதற்குத்தான் பயன்பட்டன. இப்போதும் ஸ்மார்ட்போன்களை பேசுவதற்காகப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.
கட்டை விரலும் கழுத்தும் உஷார்
ஸ்மார்ட்போனால் பெற்றுவரும் நன்மைகளை எல்லாம் பேசி முடியாது என்கின்றனர் அதன் அபிமானிகள். நன்மைகள் அதிகம்தான், ஆனால் ஸ்மார்ட்போன்கள் அதிகமும் எதற்காகப் பயன்படுகின்றன? ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணிப்பின்படி: வாட்ஸ் அப்-35%, ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்கள் - 17%, தொலைபேசி-17%, மின்னஞ்சல்-12%, விடியோ விளையாட்டு- 10%, செய்தித்தாள்/புத்தகங்கள்- 5%. பயனர்கள் அதிக நேரத்தை எதில் செலவழிக்கிறார்கள் என்பதை இது போன்ற கணிப்புகள் புலப்படுத்தும்.
புகழ்பெற்ற ஆங்கில ராக் இசைப் பாடகர் ரோஜர் டால்ட்டிரி சொல்கிறார்: “தொடர்ச்சியான, பெரும்பாலும் பயனற்ற தகவல்கள் ஒருவரின் படைப்பூக்கத்தை மழுங்கடித்துவிடும். சும்மா இருக்கும்போதுதான் கலாபூர்வமான சிந்தனைகள் தோன்றும்”. சிந்தனையை மட்டுமல்ல, ஸ்மார்ட் போனின் அதீதப் பயன்பாடு உடலையும் பாதிக்கிறது.
ஹாங்காங்கில் பல பிள்ளைகள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கண் மருத்துவர் ஒருவர் அதற்கான காரணம் சொன்னார். “இந்தப் பிள்ளைகள் அதிகமும் தொலைக்காட்சியையும் கணினியையும்தான் பார்க்கிறார்கள். சிறிய திரை களைத் தொடர்ந்து அருகில் பார்ப்பதால் தூரக் காட்சிகளைப் பார்க்கும் சக்தி குறைகிறது. கண்ணாடி தேவைப்படுகிறது”. மருத்துவர் இப்படிச் சொன்னபோது, ஸ்மார்ட்போன்கள் கண்டறியப்படவில்லை. இப்போது கணினியும் தொலைக் காட்சியும் ஸ்மார்ட் போனுக்குள் இறங்கிவிட்டன. திரை சுருங்கிவிட்டது. கண்ணுறும் நேரமும் கூடிவிட்டது. இந்தக் குறுந்திரை மோகம் கண்களை மட்டுமல்ல, குனிந்த தலை நிமிராமல் நீண்ட நேரம் அலைபேசியைப் பயன் படுத்துவதால் கழுத்தையும் பாதிக்கிறது. மணிக்கட்டிலும் கட்டைவிரலிலும் உணர்வின்மை வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடுதிரைக்கு தடை
ஸ்மார்ட்போனின் பயன்பாடு இந்தியாவில் எப்படி இருக்கிறது? இந்தியாவில் 59 கோடிப் பேர் (மக்கள்தொகையில் 47%) அலைபேசி வைத்திருக் கிறார்கள். இதில் 21 கோடிப் பேர் (16.8%) ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். ஓர் ஒப்பீட்டுக்காக வேறு சில நாடுகளில் மக்கள்தொகையில் ஸ்மார்ட்போன் பயனர்களின் வீதம் வருமாறு: சிங்கப்பூர்- 72%, ஹாங்காங்- 63%, அமெரிக்கா-56%, சீனா-47%, இந்தோனேசியா- 14%.
இந்தியாவில் ஸ்மார்ட்போனுக்குப் பெரிய சந்தை இருப்பதாக அதன் உற்பத்தியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
`ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எஸ்.வி.ராமதாஸ் ஓரிடத்தில் சொல்லுவார்: “நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள்”. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்தியர்களைப் பற்றி அப்படி நினைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் நான்கே ஆண்டுகளில், அதாவது 2019-ல் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கையை 65 கோடியாக (மக்கள்தொகையில் 52%) உயர்த்திவிடலாம் என்பது அவர்களது கணிப்பு.
ஸ்மார்ட்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது ஒருவரை அதற்கு அடிமையாக்கிவிடும். ஆனால், நமது சமூகம் அப்படிக் கருதுகிறதா என்று தெரியவில்லை. அறிஞர்கள் ஸ்மார்ட்போன் வழியாக அறிவு ததும்பி வழிவதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்குத் தொடுதிரை மோகம் இருப்பதாக நினைக்கிறீர்களா? ஹாங்காங் பத்திரிகையாளர் பீட்டர் காமெரர் சில யோசனைகள் சொல்கிறார்: “தலையணைக்கு அருகே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு உறங்காதீர்கள். வாட்ஸ் அப்பையும் முகப் புத்தகத்தையும் படிக்கிற நேரத்தில், பகுதி நேரத்தைப் புத்தகங்கள் படிப்பதற்கு ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்மார்ட்போனை உங்கள் கைக்கெட்டாத தூரத்தில் வைத்துவிடுங்கள். சாப்பாட்டு மேசையில் தொடுதிரைக்குத் தடை விதியுங்கள்”.
விரல் இடுக்கில் தழுவும் உலகம்
முகப்புத்தகத்தில் ஒரு வெறுப்பாளரின் கருத்து ரையைப் படிக்கும்போதோ அல்லது அதற்கு எப்படி இன்னும் காழ்ப்போடு பதிலளிக்கலாம் என்று யோசிக்கும்போதோ நாம் தவறவிடுவது படுக்கையறை ஜன்னலின் மீது அமர்ந்து படபடவென்று சிறகடிக்கும் மணிப்புறாவாக இருக்கலாம். வாட்ஸ் அப்பில் ஒரு வறட்டுத்தனமான நகைச்சுவையை வாசிக்கும்போது நாம் கவனிக்காமல்போவது பேருந்து நிறுத்தத்தில் நட்பு பாராட்டும் நோக்கத்தில் நம்மைப் பார்த்த புதிய மனிதராக இருக்கலாம். ஸ்மார்ட்போனுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது; மனிதர்கள் இருக்கிறார்கள். தொடுதிரையில் நமது விரல்கள் மும்முரமாக விளையாடுகிறபோது விரலிடுக்கின் வழியே வாழ்க்கை கைநழுவிப் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் நன்று. வாழ்க்கை அதனினும் நன்று.
சுயகட்டுப்பாட்டோடு ஸ்மார்ட்போனைப் பயன் படுத்தினால் அது பாரதிக்குச் சேவகனாய் வாய்த்த கண்ணனைப் போல் நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய், பார்வையில் சேவகனாய் விளங்கும்.
மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com]



விஷம்... சாப்பிடாதீர்கள்!



1886-ல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜூலியஸ் மேகியால் தயாரிக்கப்பட்ட மேகி இந்தியாவுக்கு வந்தது 1982-ல். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் மேகி நூடுல்ஸை விற்று நெஸ்லே நிறுவனம் சம்பாதித்தது ரூ. 1,500 கோடி என்கிறார்கள். இந்தியச் சமையலறைகளில் எந்த அளவுக்கு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இது.
காரீயமும் மோனோ சோடியம் குளுட்டமேட்டும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருப்பதாகச் சொல்லி, இப்போது மேகி நூடுல்ஸுக்குத் தடை விதித்திருக்கிறார்கள். மேகியினால் உண்டாகக்கூடிய ஆபத்துகளைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களும் பேசுகிறார்கள். ஆனால், இது எதுவும் புதிதல்ல. மேகி அறிமுகமான காலத்திலேயே மருத்துவர்கள் இதுபற்றி எச்சரித்தது உண்டு. இன்றைக்குப் போலத்தான் அன்றைக்கும். படிக்கிற/கேட்கிற நேரத்தில் அதையெல்லாம் படித்து/கேட்டுவிட்டு, சாப்பிடுகிற நேரத்தில் வழக்கம்போலச் சாப்பிட்டிக்கொண்டிருந்தது இந்தியச் சமூகம்.
சரி, இப்போது மேகிக்குத் தடை விதித்தாயிற்று. ஆபத்துகள் அதோடு போச்சா? கிடையவே கிடையாது. ஒவ்வொரு நாளும் 100 நோயாளிகளைச் சந்திப்பவன் என்கிற முறையில் சொல்கிறேன், மதுப்பழக்கம், புகைப்பழக்கத்துக்கு இணையாக இன்று இந்தியர்களின் உடல்நலனைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது துரித உணவுப் பழக்கம்.
மைதாவுக்கு மயங்காதீர்கள்
தெரிந்தோ, தெரியாமலோ இன்றைய இளைய சமூகத்தை மயக்கிவைத்திருக்கும் துரித உணவு அத்தனையையும் உடைத்துப்பார்த்தால் உள்ளே பதுங்கிக்கொண்டிருந்த பூதமாக வெளிவருவது மைதா. புரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர்… எல்லாமே மைதா. கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து வெண்மையாக்கப்படுவதே மைதா. இப்படியான உருவாக்கத்தின்போதே நார்ச்சத்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறது மைதா. அடுத்து,
பி-காம்ளெக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுச்சத்துகளும் குறைந்துவிடுகின்றன. மைதாவால் ஆன உணவு என்பதே குப்பை உணவுதான். கூடவே, கோளாறு தரும் உணவாகவும் மாறிவிடுகிறது. செரிமானத்தில் தொடங்கும் கோளாறுகளின் பயணம் மலச்சிக்கல், மூலநோய் என நீண்டு உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு என்று மேலும் விரிகிறது.
மைதாவுக்கு வெண்மை நிறம் தருகிற பென்சோயில் பெராக்சைடு புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டது. மைதாவை மிருதுவாக்கச் சேர்க்கப்படும் அலெக்சான், கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவுநோய்க்கு வழிவகுக்கக் கூடியது. சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மைதாவில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் இவை. இந்தியாவிலோ இது தொடர்பான விழிப்புணர்வே இன்னும் உருவாகவில்லை.
சேர்மானங்களும் சரியில்லை
துரித உணவுகளின் மூலப்பொருளான மைதா மட்டும்தான் என்றில்லை, துரித உணவில் சேர்க்கப்படும் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறது ஆபத்து. துரித உணவுத் தயாரிப்பில் எண்ணெய்க்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. சுத்திகரிக்கப்பட்ட எண்ணைய் நல்லது என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அப்படியல்லவே? எண்ணெய் சுத்திகரிப்பு என்பதே பல வேதிப்பொருட்களைச் சேர்த்து, வெப்பநிலையை மாற்றி, பலகட்டங்களைக் கடப்பதுதான் என்று ஆகிவிட்டதே? சரி, வீட்டிலும் அதே எண்ணெயைத்தானே பயன்படுத்துகிறோம் என்று கேட்காதீர்கள். வீட்டில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை 10 முறை மீண்டும் மீண்டுமா பயன்படுத்துகிறோம்? ‘ஃபிரி ரேடிக்கல்ஸ்’எனும் நச்சுகள் அதிகரிக்க வழிவகுப்பது இந்த எண்ணெய்க் கலாச்சாரம். இப்படித் துரித உணவுகளில் ஒவ்வொரு சேர்மானங்களில் புதைந்திருக்கும் ஆபத்துகளையும் பெரிய பட்டியல் போடலாம்.
எமபானம் குளிர்பானம்!
துரித உணவுக் கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களால் தவிர்க்கவே முடியாதது குளிர்பானம். பீட்சாவோ, பர்கரோ கூட நமக்கு ஒரு பாட்டில் குளிர்பானமும்தானே தேவைப்படுகிறது? குளிர்பானங்களின் உருவாக்கத்தில் ‘காஃபீன்’எனும் வேதிப்பொருளுக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பை நிலைப்படுத்துவதற்காக, சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு. கேரமல் மற்றும் பீட்டா கரோட்டீனை வண்ணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருபவை. உதாரணமாக, பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கின்ற எனாமலைச் சீக்கிரம் சிதைத்து பற்சிதைவுக்கு வழிவகுக்கக் கூடியது. கோலா பானங்களுக்குக் கருப்பு வண்ணம் தருகின்ற கேரமல் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. காஃபீன் ரத்த அழுத்தத்தை அதிகரித்து நரம்புத்தளர்ச்சிக்கும் இதய நோய்க்கும் வழிவகுக்கக் கூடியது.
முன்பருவமடைதலில் தொடங்கி மலட்டுத்தன்மை வரை
மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பெண்கள் பருவமடைதலைப் பற்றிப் பேசினால், ஒரு உண்மை தெரியவரும். முன்புபோல இல்லை, இன்றைய குழந்தைகள் சீக்கிரம் பருவம் அடைந்துவிடுகிறார்கள். அதாவது முன்பருவமடைதல். எட்டு வயதிலேயே பூப்பெய்திவிட்ட குழந்தைகளை நான் சந்தித்திருக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும், நம்முடைய உணவுப் பழக்கத்துக்கு அதில் முக்கிய இடம் உண்டு. பெண்கள் பூப்பெய்வதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனைப் பதப்படுத்தப்பட்ட / துரித உணவுகள் அதிகமாகச் சுரக்கச்செய்யும் தன்மை கொண்டவை என்கின்றன ஆய்வு முடிவுகள். முன்பருவமடைதல் என்பது வெறும் உடல் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல. உதாரணமாக, முன்பருவம் அடையும் ஒரு குழந்தையின் எலும்பு வளர்ச்சி சீக்கிரம் நின்றுபோகிறது. இதனால், அவர்களுடைய உயரம் குறைந்துபோகிறது. இது உடல்ரீதியாக, மன ரீதியாக, சமூகரீதியாகப் பல பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது.
மேலும், தினமும் துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் 60% பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடற்பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடற்பருமன் ஒன்று போதுமே, நமது உடலின் சீரான நிலையைக் குலைக்க.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் செயற்கைக் கருவூட்டலுக்கு உள்ளாகிற இளம் தம்பதியரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எங்கோ எப்போதோ கேள்விப்பட்ட நிலை மாறி, பல இளம் தம்பதியினர் குழந்தையின்மைப் பிரச்சினையை எதிர்கொள்வதை இன்று நேருக்கு நேர் பார்க்கிறோம். காரணம் என்ன? ஹார்வர்டு பல்கலைக்கழகமும் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. நொறுக்குத்தீனி, துரித உணவுக் கலாச்சாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுவதை அவை அந்த ஆய்வின் மூலம் கண்டறிந்தன. மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கும் முக்கியப் பங்கிருப்பதை அவை உறுதிசெய்தன.
இவ்வளவு பாதிப்புகளை எதிர்கொள்கிறோம். ஆனால், என்ன படிப்பினையைப் பெறுகிறோம்?
மேகியை நாம் துரத்தியிருக்கலாம், குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும். ஆனால், இன்னும் துரத்த வேண்டியவை நிறைய இருக்கின்றன. அரசாங்கத்தின் தடை அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. துரித உணவுகளை நாமே துரத்தலாம்!
கு. கணேசன், பொது நல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com











மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்





குழந்தைகளை நோயில் வீழ்த்தும் அளவுக்கு மாசுபட்ட மிகவும் மோசமான நகரம் டெல்லி
என்னுடைய எட்டு வயது மகன் பிராம், மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டான். இன்ஹேலர் இல்லாமல் அவனால் ஒரு நிமிடம்கூடச் சுவாசிக்க முடியாது என்றாகிவிட்டது. டெல்லிக்கு நாங்கள் வந்து ஒன்பது மாதங்களான பிறகு, ஒரு நாள் இரவு இன்ஹேலர்கூட அவனுக்கு உதவவில்லை. மூச்சுத் திணறல் கடுமையாகியது. நாங்கள் பீதியில் ஆழ்ந்தோம். என் மனைவி உடனே ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்டாள். சில மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனே செல்லுமாறு நண்பர் கூறினார். அனைவரும் காரில் புறப்பட்டோம்.
இந்தியாவின் வாகனப் போக்குவரத்து உலகிலேயே மிகவும் ஆபத்தானது. சிக்னல் விளக்குகள் எல்லாம் அலங்காரத்துக்காகத்தான். ஓட்டுநர்கள் தங்கள் விருப்பப்படிதான் போவார்கள். புதுடெல்லியில் இரவில் சாலைகள் முழுக்க லாரிகளின் ஆதிக்கம்தான். மயிர்க்கூச்செரிய வைக்கும் பயணம் அது. மருத்துவமனையில் நுழைந்ததுமே டாக்டர்கள் ஸ்டெராய்ட்களை உள்செலுத்தினார்கள். அதன் பிறகு, மேல் சிகிச்சைக்கு 1,000 டாலர்களை (சுமார் ரூ. 63,000) கொடுத்தால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடித்தார்கள். எப்படியோ ஒரு வாரம் கழித்து உடல் தேறி பிராம் வீடு திரும்பினான்.
உண்மையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என்னைத் தெற்காசிய நிருபராக ‘நியூயார்க் டைம்ஸ்’ நிர்வாகம் அறிவித்தபோது நானும் என் மனைவியும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தோம். இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற அத்தனை ஆசையாக இருந்தது அப்போது. காசு போடாவிட்டால் நகர மறுக்கும் பிச்சைக்காரர்கள், 120 டிகிரி வரை அடிக்கும் வெயில் என்று நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தோம். ஆனால், குழந்தைகளை நோயில் வீழ்த்தும் அளவுக்கு மாசுபட்ட நகரமாக டெல்லி இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. டெல்லிக்கு ஆபத்து என்பது நிலம், நீர், காற்று, உணவு, ஈக்கள் என்று எல்லாவற்றாலும் வருகிறது என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டோம். இவையனைத்தும் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான இந்தியர்களைக் கொல்கின்றன. உலகிலேயே மிகவும் மோசமான சுகாதாரம் நிலவும் நகரங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநகரின் சுமார் 44 லட்சம் குழந்தைகளில் சரிபாதிப் பேருக்கு நச்சுக் காற்று காரணமாக, கடுமையான நுரையீரல் நோய்கள் வருகின்றன என்று பின்னர் அறிந்துகொண்டேன்.
தலைநகரின் தலைவிதி
மக்கள் தொகை அதிகமுள்ள, மிகப் பெரிய மாநகரங்களில் மோசமானது டெல்லிதான். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைப்படி, பெய்ஜிங் நகரத்தைவிட டெல்லி நகரக் காற்று இரண்டு மடங்கு அசுத்தப்பட்டிருக்கிறது. உலகில் மாசு அதிகமாக உள்ள 25 நகரங்களில் ஒன்று டெல்லி. பி.எம். 2.5 என்ற துகள்தான் காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம். அது மிகவும் மாசுபட்ட நகரமான பெய்ஜிங்கிலேயே 500 என்ற கணக்கில்தான் இருக்கிறது. ஆனால், டெல்லியிலோ 1,000 (இரண்டு மடங்கு) என்ற அளவில் இருக்கிறது. என்னுடன் பழகிய அமெரிக்க நண்பர்களில் கணிசமானவர்கள் தங்களுடைய குழந்தைகளை டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பள்ளியிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டனர். அடுத்த ஆண்டு இந்தப் பள்ளிக்கூடத்தில் சரிபாதிக்கும் மேல் காலியிடமாகத்தான் இருக்கும்.
காற்று மாசுபட்ட நகரில் வாழும் குழந்தைகளின் நுரையீரல் நிரந்தரமாகவே பாதிப்புக்குள்ளாகிறது. பாதிப்பு குறைவான நகரங்களுக்கு அவர்கள் குடிமாறினாலும் முதலில் ஏற்பட்ட பாதிப்பு அகல மறுக்கிறது. நுரையீரல் முழுச் செயல்பாட்டை இழந்தவர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படுகிறது. ஊனமடையவும் வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தமும் ரத்தத்தில் வேண்டாத கொழுப்புச் சத்தின் அளவும்கூட அதிகரிக்கிறது. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிய குழந்தைகள் அதிக நாட்களுக்கு வாழ்வது கடினம். காற்று மாசடைவதால் குழந்தைகளின் அறிவுத்திறன் குறைகிறது. மூளை வளர்ச்சிக் குறைவு, வலிப்பு நோய், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்கூட கர்நாடகத்துக்குச் சென்று இயற்கை சிகிச்சை செய்துகொண்டார்.
சாக்கடை நீர்க் குளியல்!
டெல்லியின் மாசுக்குக் காற்று மட்டும் காரணம் அல்ல. சுமார் 60 கோடி இந்தியர்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள். இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை எந்த விதச் சுத்திகரிப்பும் இல்லாமல் அப்படியே ஆற்றிலும் வாய்க்கால்களிலும் கலக்கின்றன. இது எங்கள் குடியிருப்புக்குள்ளேயே வரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாங்கள் குடிவந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டுக் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதாகக் கூச்சல் போட்டார். அந்தத் துர்நாற்றம் வீடு வீடாகப் பரவியது. வீட்டுக் கழிவுநீர்க் குழாய் அடைத்துக்கொண்டபோது வீட்டைக் கட்டியவர் குழாய்களைத் திறந்துபார்த்து அடைப்பை நீக்கியிருக்கிறார். அப்போது கழிவுநீர் குட்டையாகத் தேங்கி, அப்படியே ஊறிக் குடிநீர் குழாயில் சேர்ந்து வீடுகளுக்கு வரத் தொடங்கிவிட்டது பின்னர் தெரியவந்தது. அந்த நேரம் பார்த்து நான் குளித்துக்கொண்டிருந்தேன். உடல் முழுக்கத் துர்வாடை. உடனே, குளிப்பதை நிறுத்திவிட்டு துண்டால் உடலைத் துவட்டிக்கொண்டு வெளியேறினேன்.
அலட்டிக்கொள்ளாத இந்தியர்கள்
ஆண்டின் பெரும்பாலான நாட்களில் யமுனை நதி ஓடாது. சாக்கடை நீர் தேங்கியபடியே இருக்கும். அத்துடன் திடக் கழிவுகளும் சேர்ந்து மிதக்கும். இறந்துபோன தெரு நாய்கள், குரங்குகள், பூனைகள், கால்நடைகளின் எச்சங்களும் யமுனையில்தான் தூக்கி வீசப்படும். இந்தக் கழிவுகளை ஈக்களும் கொசுக்களும் இதர பூச்சிகளும் மொய்த்துக்கொண்டேயிருக்கும். போதாததற்கு மனிதக் கழிவுகளும் அப்படியே நேரடியாக இதில் கலக்கவிடப்படும். இதில் மேயும் பூச்சிகள் அப்படியே மனிதர்களையும், வீட்டில் சமைத்து மூடாமல் வைக்கும் உணவுகளையும் மொய்க்கும். டெல்லி மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்குக் குழாயில் வரும் நீரே துர்நாற்றம் அடிக்கும். இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணமே பொதுச் சுகாதாரமின்மைதான். இந்தச் சுகாதார நிலைகளையெல்லாம் வரிசைப்படுத்திப் பார்த்தால், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பது புரியும். ஆனால், மக்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஒரு நாள் பிற்பகல் எங்களுடைய குடியிருப்பின் ஒரு பகுதியில் பழைய குப்பைகளுடன் ரப்பர், தார், பிளாஸ்டிக் போன்றவற்றைப் போட்டு யாரோ எரிக்கத் தொடங்கினார்கள். நச்சுத்தன்மையுள்ள அந்தக் கனமான காற்று அப்படியே படர்ந்து எல்லா வீடுகளுக்குள்ளும் பரவியது. தனது சிநேகிதியுடன் நடைப் பயிற்சியில் இருந்த என் மனைவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நீர் சுரந்தது. நெஞ்சு வறண்டு கடும் இருமல் தொடங்கியது. அவர்கள் வேகமாக வீட்டுக்குள் வந்து கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக்கொண்டார்கள். அப்போது பிராமுக்கு மீண்டும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பிராமை நோயாளியாக்கிய டெல்லி
அடுத்த ஐந்து நாட்களுக்கு பிராம் வீட்டிலேயே படுத்திருந்தான். என் மனைவி ஸ்டெராய்டு மருந்துகளைக் கொடுத்துவந்தாள். தன்னுடைய அண்ணன், நண்பர்களைவிட தான் பூஞ்சையாக இருக்கிறோமே என்று பிராம் வருத்தப்பட்டான். டெல்லிக்கு வருவதற்கு முன்னால் அமெரிக்காவில் அவனுக்கு ஓரிரு முறை மூச்சுத் திணறல் லேசாக இருந்தது. போகப்போகச் சரியாகிவிடும் என்று அமெரிக்க டாக்டர்கள் கூறினர். ஆனால், டெல்லிக்கு வந்த பிறகு அவன் முழு ஆஸ்துமா நோயாளியாகிவிட்டான். அமெரிக்காவிலேயே தங்கியிருந்தால் ஆஸ்துமா அவனுக்கு வந்திருக்குமா? டெல்லியில் கால்பந்து, ஹாக்கி விளையாடும் மைதானங்களின் பக்கவாட்டில் நடந்து போனால் ஏராளமான இன்ஹேலர்களைப் பார்ப்பீர்கள். குழந்தைகள் ஏதும் அறியாதவர்கள், நல்லது செய்வோம் என்று அவர்கள் நம்மைத்தான் நம்பியிருக்கிறார்கள். சுகாதாரக் கேடான ஊர்களில் அவர்கள் வாழுமாறு செய்வது நம் அனைவருடைய தவறு. சிறு வயதில் ஏற்படும் சாதாரண பாதிப்பு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையே பறித்துவிடும். நாங்கள் மீண்டும் வாஷிங்டன் திரும்புகிறோம். இதைச் சொன்னவுடன் இரு மகன்களுக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. மூத்த மகன் ஏடென் தனக்கு ஒரு சைக்கிளும் ஸ்கேட்டிங் பலகையும் வாங்கித் தர வேண்டும் என்று இப்போதே கேட்டுவிட்டான். வாஷிங்டன் போனால், என்னுடைய ஆஸ்துமாவும் போய்விடும் என்று உற்சாகமாகக் கூவினான் பிராம்.
-கார்டினர் ஹாரிஸ்,
நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் தெற்காசிய நிருபராக டெல்லியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.

ஆயுதம் செய்வோம் – உள்நாட்டிலேயே!





அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும், இந்தியாவின் பாதுகாப்பு (ராணுவம்) அமைச்சர் மனோகர் பாரிக்கரும் ராணுவ வர்த்தக, தொழில்நுட்ப முன்முயற்சிகளுக்கான ஒப்பந்தத்தில் சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டனர். 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு வழிவகை செய்யும். ‘இதுவரை நடந்திராத நிகழ்ச்சி’ என்று இந்த ஒப்பந்தம் வர்ணிக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் நமது ராணுவத் தேவைகளைப் பூர்த்திசெய்யுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
எந்த நாடும் தன்னிடமுள்ள நவீன ஆயுதத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைப் பிற நாடுகளுக்கு முழுவதையும் கொடுத்துவிடாது. அப்படி எதிர்பார்ப்பதும் சிறுபிள்ளைத்தனம். இரண்டாவது ஆண்டில் அடி எடுத்துவைத்திருக்கும் மோடி அரசு, நாட்டின் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை மனதில் கொண்டு, அதற்கேற்ப ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்த வேண்டிய தருணம் இது. பாதுகாப்புத் தேவைகளுக்கான ஆயுதங்கள், சாதனங்களை உள்நாட்டில் தயாரிப்பதைவிட நமக்கு வேறு வழியே இல்லை.
குறைந்த நிதி
நம் நாட்டு மக்கள்தொகையில் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில், பாதுகாப்புத் தேவைகளுக்காக மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 2%-க்கும் குறைவாகத்தான் நம்மால் நிதி ஒதுக்க முடிகிறது. எதிர்காலத்தில் அது 2% அளவைத் தாண்டுமா என்பதும் சந்தேகம்தான். மிகவும் அரிதான இந்த நிதியை நிர்வாகரீதியாகவும் செயல்திட்ட வழியாகவும் திட்டமிட்டுச் செலவிட வேண்டியது அவசியம்.
செயல்திட்ட வழியில் முதலில் இரு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறைகள் மிகவும் விரைவாகச் சீர்திருத்தப்பட வேண்டும். “முப்படைகளுக்கும் தேவைப்படும் ஆயுதங்கள், படைக்கருவிகள், குண்டுகள் போன்றவை ‘ஒரு சில நாட்களுக்கு மட்டுமே’ போதுமான அளவுக்குத்தான் கைவசம் இருக்கின்றன” என்று ஒரு தளபதி கூறியிருப்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ராணுவக் கொள்முதலின்போது வாங்கும் சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது, பாகங்களைத் தயாரிப்பது, வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பெற்று இணைந்து தயாரிப்பது போன்றவற்றைத் தீர்மானித்து இறுதி செய்யத் தனிப் பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும். இறக்குமதி செய்தால்தான் போர்க் கருவிகளையும் சாதனங்களையும் பெற முடியும் என்ற நிலையிலிருந்து நாட்டை மீட்கத் தவறிவிட்டது அரசு.
பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. ராணுவ உற்பத்தியில் தன்னிறைவுக் கொள்கையை வகுத்துச் செயல்படுத்தினால்கூட நாம் முழுத் தன்னிறைவு பெற இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பதே இப்போதைய நிலை.
யார் பொறுப்பு?
உள்நாட்டிலேயே ஆயுதங்களையும் சாதனங்களையும் தயாரித்தால் நல்ல தரத்தில், நமக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில், கட்டுப்படியாகக்கூடியச் செலவில், தொடர்ச்சியாகத் தயாரித்துக்கொண்டிருக்க முடியும். நம்முடைய பாதுகாப்புக் கொள்முதல் கொள்கை இதை மனதில் கொள்ள வேண்டும். ஒருவேளை, நினைத்ததைவிட அதிக நாட்களுக்குச் சண்டை நீடித்தால் நமது துருப்புகளுக்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் சாதனங்களையும் தொடர்ந்து தயாரித்து இடைவெளியில்லாமல் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அரசுத் துறையிலோ தனியார் துறையிலோ அந்த நிறுவனங்கள் நம் நாட்டிலேயே இருந்தால்தான் அது சாத்தியம். எனவே, தேவைப்படும் ஆயுதங்களையும் சாதனங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான அடிப்படைகளை ஏற்படுத்துவதாகவே ஆயுதக் கொள்முதல் கொள்கை இருக்க வேண்டும்.
போருக்குத் தேவைப்படும் கருவிகளைத் தயார் செய்யக்கூடிய அமைப்பே நம்மிடம் இல்லை என்பதுதான் நமக்கிருக்கும் மிகப் பெரிய பின்னடைவு. அமைப்பே இல்லாததால் இலக்குகள், பொறுப்பு, பதில் சொல்லும்படியான கட்டாயம் ஆகியவற்றை யார் மீதும் சுமத்தும் நிலை இப்போது இல்லை. பாதுகாப்புத் துறைக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் துறையும், கொள்முதலுக்கான தலைமை இயக்குநர் அலுவலகமும் பாதுகாப்பு அமைச்சகமும் தங்கள் அளவில் குட்டி ராஜாக்கள். ராணுவ சாதனங்கள் கையிருப்பில் இல்லை என்பதற்காகவோ, உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதற்காகவோ இந்த மூன்றில் ஒன்றுகூடப் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லாத நிலை!
வழிகாட்டும் வெளிநாடுகள்
அமெரிக்காவிலும் இதே போன்ற நிலைமை ஆரம்பத்தி லேயே உணரப்பட்டதால் ராணுவக் கொள்முதலுக்காகவே தனித் துறை ஏற்படுத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல் படுகிறது. இதை அந்நாட்டு ராணுவத் துறை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் ராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்கள், ஆயுதங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதற்காகவே ராணுவத் துறையில் நிரந்தரத் தனிப் பிரிவு அதிகாரிகள் இருக்கின்றனர்.
இந்தியாவிலோ வேறு துறைகளிலிருந்து ‘அயல் பணி நியமன’ அடிப்படையில் அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர். பாதுகாப்புத் துறைக்காகப் பாடுபட்டு எதையும் செய்யும் மன நிலையும், பொறுப்பும் அவர்களுக்குக் கிடையாது. குறிப்பிட்ட காலம் முடிந்ததும் தங்கள் தாய்த் துறை வேலைக்குத் திரும்புவதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். ராணுவத்துக்குத் தேவையானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும், அதற்குத் திட்டம் வேண்டும், அமைப்பு வேண்டும், செயல்திட்டம் வேண்டும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்பு, அக்கறையெல்லாம் கிடையாது.
ராணுவக் கொள்முதல் துறைக்கான சீர்திருத்தத்தைத் தொடங்குவது என்றால் அதற்கென்று நிரந்தரமான, தனி நிர்வாகப் பிரிவைத் தொடங்க வேண்டும். ராணுவத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் தேவைப்படும் சாதனங்களைப் பட்டியலிட்டு, உள்நாட்டில் தயாரித்து வழங்க கொள்கை வகுக்கவும் செயல்படுத்தவும் தனித்துறை அதிகாரிகள் வேண்டும். அவர்களுடைய முழு நேரப் பணியும் இந்தத் துறையிலேயே இருக்க வேண்டும். இதெல்லாம் தேவையா, சாத்தியமா என்ற கேள்வி அர்த்தமற்றது. ‘இந்திய தொலைத் தகவல் ஒழுங்காற்று ஆணையம்’(டிராய்) எனும் அமைப்பு இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வொரு துறைக்கும் இப்படி அதிகாரமுள்ள தனிப் பிரிவுகளைத் தொடங்கினால்தான் அந்தத் துறையின் தேவைகள் முன்னுரிமை தரப்பட்டுக் கவனிக்கப்படும்.
செய்ய வேண்டியது என்ன?
இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும்போது, அவற்றை உள்நாட்டிலேயே இணைந்து தயாரிக்கவும், அதன் பாகங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் தொழில்நுட்ப, வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்வது அவசியம். அதற்கான தனிப் பிரிவு முழுமையாக ஏற்படுத்தப்பட வேண்டும். இது இல்லாததால் இப்போது ஒவ்வொரு கொள்முதலுக்கும் 10% முதல் 15% வரையில் கூடுதலாக நாம் பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
பிரான்ஸிலிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்கள், 400 கோடி டாலர் மதிப்பில் கொள்முதல் செய்யப்படவிருக்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு 10,000 கோடி டாலர்களாகக்கூட அதிகரிக்கலாம். இவ்வளவு பெரும் தொகையைச் செலவிடப்போகும் பிரிவில் வேலை பார்க்கும் அலுவலர்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 10 பேர்தான்! தனிப் பிரிவுக்கு உடனே ஆட்களை வேலைக்கு எடுக்க முடியாது என்றால், அயல்பணிக்காக அனுப்பப்படும் அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சம் ‘5 ஆண்டுகள் தொடர் பணி’என்றாவது உத்தரவிட்டு அனுப்ப வேண்டும்.
இது போன்ற துறைகளுக்கான அதிகாரிகளை, இப்போது வரவிருக்கும் ‘தேசிய ராணுவப் பல்கலைக்கழகம்’ மூலம் படிக்க வைத்து, பயிற்சி தந்து அனுப்புவது அவசியம்.
பாதுகாப்புத் துறையை அடி நிலையிலிருந்து வலுப்படுத்தும் பணியைப் புதிய அரசு தனது இரண்டாவது ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும். எந்தப் பகுதிக்கு ஆபத்து வந்தாலும் நம்முடைய முப்படைகளும் அங்கே சென்று பாதுகாப்பளிக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. அதற்கேற்ற வசதிகளை அரசும் செய்து தர வேண்டும். ராணுவ ஊழியர்களுக்கு முறையான நல்ல ஊதியம், வீட்டு வசதி, ஓய்வு பெறும்போது ‘ஒரே மாதிரியான பதவி வகித்தவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ என்பனவற்றை நிறைவேற்ற வேண்டும்.
- மன்மோகன் பகதூர்,
விமானப் படையில் துணைத் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக: சாரி