Saturday, 25 November 2023

ஓங்கி ஒலித்த புரட்சி முழக்கம்!


 ஓர் இயக்கம் மக்கள் மத்தியில் வேர்பிடிக்க, வளர்ச்சி பெற ஒரு கருத்தியல் தேவைப்படுகிறது. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது. சமூக விடுதலை, பொருளாதாரச் சுதந்திரம் - சோஷலிஸமே தீர்வு என்கிற கருத்தியலை முன்னிறுத்தி, தொடக்கக் காலத்திலும் அடுத்தடுத்தும் கட்சியை வளர்த்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் என்.சங்கரய்யா. கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய முதல் தலைமுறைத் தலைவர்களான பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், சீனிவாச ராவ், கே.பி.ஜானகியம்மாள் போன்றவர்களோடு இணைந்து பணியாற்றியவர் சங்கரய்யா. அவருடைய வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய வரலாற்றின் ஒரு பகுதி!

விடுதலை வீரர்: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே நாட்டு விடுதலைக்காக மாணவர்களைத் திரட்டி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். பட்டப் படிப்பு இறுதி ஆண்டுத் தேர்வுக்கு 15 நாள்களுக்கு முன்னதாகக் காவல் துறை அவரைக் கைது செய்தது. “அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு, “நாட்டு விடுதலைக்காகச் சிறை செல்கிறோம் என்னும் உற்சாகத்தோடுதான் சென்றேன். பட்டப் படிப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை” என்றார் சங்கரய்யா.

முதன்மைத் தலைவர்: 1940இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த சங்கரய்யா, 1944இல் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தத்துவார்த்தப் பிரச்சினையின் காரணமாக, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய 32 தோழர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அமைந்த முதல் மத்தியக் குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 1967, 1977, 1980 என மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளராக 1995இலிருந்து 2002 வரையில் பணியாற்றினார். விவசாய சங்கத்தினுடைய அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆட்சித் தமிழ் தீர்மானம்: 1967இல் சங்கரய்யா சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது ஆட்சிமொழித் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய சங்கரய்யா, “தமிழ் மொழி நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக, பாட மொழியாக வர வேண்டும். ஆட்சிமொழி என்பதன் பொருள் அதுதான். ஆனால், அப்படி வர வேண்டும் என்று மட்டும் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. இதையெல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதை அன்றைய முதலமைச்சர் அண்ணா ஏற்றுக்கொண்டார். அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஆட்சித் தமிழுக்காக அவர் சட்டமன்றத்தில் கொடுத்த குரல் முக்கியமானது.

சரியான தீர்வு, சார்பற்ற ஆலோசனை: 1996இல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களைத் தடுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார். சென்னை ராஜாஜி அரங்கில் இரண்டு நாள்கள் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சங்கரய்யாவுடன் நானும் பங்கேற்றேன். அப்போது சங்கரய்யா, “தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். சாதி மோதல்கள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கப்பட வேண்டும்” என்று கூறினார். இந்த வரிசை மிக முக்கியமானது. தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை ஒழிக்காமல் சாதி மோதல்களைத் தடுக்க முடியாது.

சாதி மோதல்களைத் தடுக்காமல் மக்கள் ஒற்றுமையைப் பெற முடியாது. கூட்டத்தின் முடிவில் கருணாநிதி பேசியபோது, சங்கரய்யா கூறியதை மேற்கோள் காட்டிப் பேசினார். “தோழர் சங்கரய்யா சுட்டிக்காட்டியதுபோல அரசாங்கம் நடவடிக்கைஎடுக்கும்” என்றும் அறிவித்தார். பின்னர் சமத்துவபுரங்களை அவர் உருவாக்கினார். சங்கரய்யாவோ தனது குடும்பத்தையே சமத்துவபுரமாக்கி வாழ்ந்துகாட்டினார். இப்படியாகக் கட்சிக்குள் நடைபெறும் கூட்டங்கள் என்றாலும், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்றாலும் குறிப்பிட்ட பிரச்சினைக்குச் சரியான தீர்வு எது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக பளிச்சென்று சுட்டிக்காட்டுபவராக சங்கரய்யா இருந்தார்.

1998இல் கோவை குண்டுவெடிப்பு, மதக் கலவரங்கள் நடந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாநிலச் செயலாளர் சங்கரய்யாவோடு பேச விரும்புவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அப்படிப் பேசும்போது சொல்லியிருக்கிறார், “என்.எஸ்! இந்தப் பிரச்சினை தொடர்பாக உங்களிடம்தான் முதலில் ஆலோசனை கேட்கிறேன். ஏனென்றால், நீங்கள்தான் சார்புகள் இல்லாமல் ஆலோசனை சொல்வீர்கள்” என்று. இப்படி அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றுக்குப் பக்கச்சார்பின்றி ஆலோசனைகளை வழங்குவதற்கான அனுபவமும் அறிவும் சங்கரய்யாவுக்கு இருந்ததை நாங்கள் பலமுறை உடனிருந்து பார்த்திருக்கிறோம்.

தலைமையை மதித்த தொண்டர்: 2002இல் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து சங்கரய்யா விடுவிக்கப்பட்ட பிறகு என்.வரதராஜன் அந்தப் பதவிக்கு வந்தார். அதற்குப் பிறகு நான் வந்தேன். எனக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் இப்போது அந்தப் பதவியில் இருக்கிறார். சங்கரய்யா, செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மாநிலச் செயற்குழு, மாநிலக் குழு, மத்திய செயற்குழு முடிவுகளைப் பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். யாராவது கட்சியின் முடிவுகள் குறித்துக் கேட்கும்போது, “மாநிலச் செயலாளரிடம் கேளுங்கள்” என்று சொல்லிவிடுவார். கட்சி சார்பாக ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டால்கூட மாநிலச் செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சம்மதம் தெரிவிப்பார். அந்த வகையில் மாநிலச் செயற்குழுவுக்கும் செயலாளர் பதவியில் இருப்பவருக்கும் முழுமையான மரியாதையை அளித்தார்.

அனைவரும் தோழர்களே! - நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். 1989இல் ஏ.நல்லசிவம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தபோதுதான் நான் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டேன். அப்போது சங்கரய்யாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. கட்சியின் மிகப் பெரிய தலைவரான அவர் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களிடமும் பதவி, வயது வேறுபாடு பார்க்காமல் பழகுவார். அவர் பேசுவதும் பழகுவதும் இளம் தோழர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக இருக்கும். முதல் தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இணைப்புக்கண்ணியாக அவர் இருந்தார்.

கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நினைவில் வைத்திருப்பார். அவர்கள் எல்லோரைப் பற்றியும் பெயரைச் சொல்லி நலம் விசாரிப்பார். அந்த அளவுக்கு அபாரமான நினைவுத் திறன் அவருக்கு இருந்தது. தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர் சங்கரய்யா. அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியம் குறித்தும் ஆழமாக விவாதிக்கக்கூடிய திறனைப் பெற்றிருந்தார். மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைக் கவிதை வடிவில் மு.கருணாநிதி எழுதியபோது, சங்கரய்யாவிடம்தான் முன்னுரை பெற்றார்.

புரட்சி முழக்கம்: 82 ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளார் சங்கரய்யா. கடைசியாக, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு, 2023 நவம்பர் 7 அன்று அதற்கான விழா நடைபெற்றபோது அவரால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை. அவருடைய வாழ்த்துச் செய்தியை உரையாக ஒலிபரப்பினோம். தன்னுடைய சிம்மக்குரலில், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்னும் முழக்கத்துடன்தான் அந்த உரையை முடித்திருந்தார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கில் இடப்படுவதற்கு முன் ஒலித்த முழக்கம் அது. இறப்பதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு ஆற்றிய கடைசி உரையில் சங்கரய்யா எழுப்பிய அந்த முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி!

- தொடர்புக்கு: grcpim@gmail.com

கழிப்பறை: தனிமனித கண்ணியத்தின் ஒரு பகுதியே


 “இந்தியாவுக்குச் சுதந்திரத்தைவிடச் சுகாதாரம் தான் முக்கியம்” என மகாத்மா காந்தி சொல்லி 98 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுகாதாரம் மேம்படுவதற்குக் கழிப்பறையும் அவசியம். கழிப்பறையைப் பயன்படுத்துதல் தனிமனித நலன் சார்ந்தது மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. இன்றைய நவீன யுகத்தில் எவ்வளவோ விஷயங்களைச் சாதித்துவருகிறோம். எனினும், கழிப்பறை விஷயத்தில் ஏன் இந்தியா இன்னமும் முன்னேற்றம் காணவில்லை?

கழிப்பறை இல்லை: உலகில் 420 கோடிப் பேர், அதாவது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறை உள்ள சூழலில் வாழ்கின்றனர் என்றும் 67 கோடியே 30 லட்சம் பேர், மலம் கழிக்கத் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாகவும் ஐ.நா. குழந்தைகள் நிதியமும் (யுனிசெப்), உலக சுகாதார நிறுவனமும் சொல்கின்றன. ஏழு நபர்களில் ஒருவர் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருவதாக யுனிசெப் கூறுகிறது.

“கிராமங்களில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோருக்குக் கழிப்பறை வசதி இல்லை” என தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. “கிராமப்புறக் குடும்பங்களில் 28.7% வீடுகளுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அவர்கள் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்” என்கிறது குடிநீர், சுகாதாரம் - வீட்டுவசதி நிலை குறித்த அறிக்கை. ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட 42% கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இது தமிழ்நாட்டில் 37%; ராஜஸ்தானில் 34% என உள்ளது. “96.2% நகர்ப்புறக் குடும்பங்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன” என்று தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

பள்ளிகளில்... “இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை” எனக் கூறியிருக்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால். இந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உண்டு. தமிழ்நாட்டில் கழிப்பறை வசதி இல்லாத 2,391 அரசுப் பள்ளிகளின் பட்டியலை 2020ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்படைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட செய்தியில், 2020இல் நடத்தப்பட்ட ஆய்வில், 40% அரசுப் பள்ளிகள் போதிய கழிப்பறைகள் இல்லாதவை அல்லது பயன்படுத்த முடியாதவை எனக் கண்டறியப்பட்டது. ஏறக்குறைய 72% கழிப்பறைகளில் போதிய நீர் இல்லை. தேவையான துப்புரவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக, 23% பெண்கள் பருவமடைந்த பின்னர் பள்ளிப் படிப்பைவிட்டு வெளியேறும் அவலமும் நேர்கிறது.

பாதிப்புகள்: பொதுவாகப் போதிய சுகாதார வசதிகள் இல்லாதது, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் ஆகியவை வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நீர் மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவில் இந்த நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,000 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்கிறது யுனிசெப். உயரத்துக்கு ஏற்ற எடையைக் கொண்டிருப்பதிலும் இந்தியக் குழந்தைகள் பின்தங்கியே உள்ளன. இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு, கழிப்பறையைப் பயன்படுத்தாததும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமும் பரவலாக இருப்பதே காரணம்.

முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள்கூட நோய்களைப் பரப்பும் மையங்கள்தான். இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கும் மக்களுக்கும் உண்டு. நகர்ப்புறங்களில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பொதுக் கழிப்பறைகளின் தேவை அதிகம். தவிர, ஏழை-எளிய மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்படும் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. கழிப்பறைக்குத் தேவைப்படும் தண்ணீர் வசதி, மின் வசதி, பாதுகாப்பு போன்றவற்றையும் அரசு வழங்க வேண்டும். முதியவர்களின் பயன்பாட்டுக்காக மேற்கத்திய வகை கழிப்பறைகளும் ஆங்காங்கே இருத்தல் நலம்.

பொருளாதார இழப்பு: போதிய கழிப்பறை வசதிகள், சுகாதார வசதிகள் இல்லாததால், ஒவ்வோர் ஆண்டும், ரூ.2.4 லட்சம் கோடியை இந்தியப் பொருளாதாரம் இழந்து வருகிறது என்று உலக வங்கியின் அங்கமான, நீர்-சுகாதாரத்துக்கான இயக்கம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆகும். அகால மரணங்கள், சிகிச்சை செலவு, நோய் காரணமாக வேலை நேர இழப்பு, வருமானம் இழப்பு போன்றவற்றால் இந்த இழப்புகள் நேர்கின்றன. அதாவது, சுகாதாரம் இல்லாததால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.1,200 கோடி அளவுக்குச் சுற்றுலாத் துறையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளின் அருகே மலம் கழிக்கப்படுவதால், குடிநீர் சுத்திகரிப்பதற்கு ஆண்டுதோறும், ரூ.11,200 கோடி செலவாகிறது. சுகாதாரமற்ற குடிநீர், கழிப்பிடங்களால் ஏற்படும் உடல்நலக் குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் ரூ.21,700 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கழிப்பறையின் அவசியம்: சுகாதாரத்தை ஓர் அடிப்படை மனித உரிமையாக ஐ.நா. அங்கீகரிக்கிறது. சுகாதார வசதிகளைப் பெறுவது என்பது ஒருவரது அடிப்படை உரிமையாகும். கழிப்பறை வசதி தனிநபர்களின் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. நோய்களைத் தடுப்பதிலும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் பெண்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது. பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாதது, குறிப்பாகப் பெண் குழந்தைகள் கல்வி கற்கத் தடையாக இருப்பதை மறுக்க முடியாது. கழிப்பறை மேம்பாடு என்பது, மருத்துவச் செலவுகளைக் குறைக்கிறது. சுற்றுச்சூழலையும் நீராதாரங்களையும் பாதுகாக்கிறது. பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துகிறது. காலரா, டைபாய்டு போன்ற நீர்வழி நோய்களின் பரவலைத் தடுக்கிறது. நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது.

என்ன செய்ய வேண்டும்? - 2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான கழிப்பறைகள் - தண்ணீர் என்கிற சுகாதார இலக்கை ஐ.நா. நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த இலக்கை அடைய உலகம் இன்னும் ஐந்து மடங்கு வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. “2015 முதல் 2020 வரை, இந்தியாவில் 6,00,000 கிராமங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் அற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன” என அரசு கூறுகிறது. கழிப்பறை குறித்து மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர் மத்தியில் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளிக் கழிப்பறைகளில் மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரத்துக்கான கூடுதல் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். கழிப்பறைகளைப் பராமரிப்பதில் தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். பயன்படுத்துவதற்கான தண்ணீர், தேவையான துப்புரவுச் சாதனங்கள், கிருமிநாசினிப் பொருள்கள் இருக்க வேண்டும். இவை கிடைக்க உள்ளாட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

உள்ளாட்சிக் கூட்டங்களிலும் கிராமசபைக் கூட்டங்களிலும் கழிப்பறைத் தேவைகள் குறித்து மக்கள் பேச வேண்டும். பொதுக் கழிப்பறைகளில் புகார் பெட்டி வைக்கலாம். பத்து நாள்களுக்கு ஒருமுறை இந்தப் புகார்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்கலாம். கழிப்பறைகள் பராமரிப்பை எளிமைப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குறைந்த தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகளை ஏற்படுத்தலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தனியார் ஓட்டல்களின் கழிப்பறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதைக் காண்கிறோம். அதுவும் அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால், மாநகராட்சிகளின் கட்டணக் கழிப்பறை முகம் சுளிக்க வைப்பது ஏன்? தனி மனித ஆரோக்கியம், நாட்டின் பொருளாதார இழப்பைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, கழிப்பறைகள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியம்.

- தொடர்புக்கு: thirugeetha@gmail.com