Wednesday, 15 July 2015

முல்லை பெரியாறு 120: எட்டு ஆண்டுகள் கடின உழைப்பில் உருவான அணை


பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணை


பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணை
முல்லை பெரியாறு அணையை கட்டுவது தொடர்பான ஆய்வு முயற்சிகள் 1795-ம் ஆண்டு முதலே தொடங்கின. மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது என்பதை மட்டுமே அறிந்த பலராலும், தற்போது அணை கட்டப்பட்டுள்ள இடம் மிக அடர்ந்த வனப்பகுதி என்பதால் இந்த இடத்தின் அருகில் நெருங்கக்கூட முடியவில்லை.
1862-67 வரை ஆய்வு செய்த கேப்டன் ரியோஸ் முதன்முறையாக ரூ.17.49 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்தார். 1872-ல் ஸ்மித் ரூ.53.99 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரித்தார். 1882-ல் பென்னி குவிக் ரூ.64.39 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரித்து அளித்தார். அனைவரின் தொழில்நுட்ப அறிக்கைகளையும் ஆய்வு செய்த ஆங்கிலேய அரசு பென்னிகுவிக்கின் அறிக்கையே சிறந்தது என்பதால் அதை ஏற்றது. பெரியாறு அணை திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக 1884 ஏப்ரல் 14-ல் பென்னிகுவிக் நியமிக்கப்பட்டார்.
பணிகள் தொடக்கம்
சென்னை மாகாண கவர்னராக இருந்த கன்னிமராபிரபு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் மாயோ ஆகியோர் 1887-ம் ஆண்டு பெரியாறு அணை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தனர். ஜெனரேட்டர், இரும்புப் படகு, டர்பைன்கள், மண் அள்ளும் இயந்திரம், நீராவி இழுவை இயந்திரம் உட்பட ஏராளமான இயந்திரங்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 24 கி.மீ. செங்குத்தான கணவாய் பகுதி, இடையில் ஓடிய சிறிய ஆறு, 13 கி.மீ. அடர்ந்த வனத்தை கடந்து இந்த இயந்திரங்களைக் கொண்டு செல்வது பெரும் சவாலாக இருந்தது. மலை அடிவாரத்தில் நீராவி இயந்திரங்களை இயக்கி, இதன் மூலம் இழுப்பு கயிறை பயன்படுத்தி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அணையை இழுத்துச்சென்ற வெள்ளம்
அப்போது பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த கம்பம், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 1880-ல் பெரும்பாலான பணி முடியும் நிலையில் காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துச் சென்றது. 1890, 91, 92-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அணையின் பல பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தை கட்டுப்படுத்த மணல் மூட்டைகளுடன் உயிரை துச்சமாக மதித்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். கட்டுமானத்தை முழுமையாகவும், பாதியாகவும் வெள்ளம் இழுத்துச்சென்றதும் நிகழ்ந்தது. வெள்ளம் வழிந்தோடும் வகையில் ஒவ்வொரு பத்து அடியாக அணையின் சுவர் எழுப்பப்பட்டது.
சுண்ணாம்பு கலவை
கட்டுமானத்துக்குத் தேவையான கல், மணல் அணை பகுதியிலேயே தாராளமாக கிடைத்தன. 80 ஆயிரம் டன் சுண்ணாம்பு, சுடப்பட்ட ஓடுகளை உடைத்து உருவாக்கப்படும் சுர்க்கி ஆகியன தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. பெரிய செக்கில் மாடுகளை வைத்து சுண்ணாம்பை அரைத்து, அதில் கடுக்காய் நீர், கருப்பட்டி கலந்த கலவை உருவாக்கப்பட்டது. கான்கிரீட்டுக்கு இந்தக் கலவைதான் பயன்படுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் சுரங்கப்பாதை
முன்னும், பின்னும் சுர்க்கி கலவையால் கடினப்பாறை கற்கள் மூலம் சுவரும், நடுவில் சுண்ணாம்பு, சுர்க்கி, பாறை கற்களால் ஆன கான்கிரீட்டால் நிரப்பப்பட்டது. அணையின் மொத்த எடை 32,43,000 கிலோ நியூட்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நீர், அலையால் ஏற்படும் எந்த அழுத்தத்தையும் தாங்கவல்லது.
அணையின் சிறப்பு
அணையைத் திறந்ததும் கால்வாயில் தண்ணீர் பாய்ந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலை இந்த அணையில் இல்லை. அணையின் நீளம் 1,200 அடி. உயரம் 155 அடி. அஸ்திவார சுவர் வரை உயரம் 158 அடி. அஸ்திவாரத்தின் அகலம் 115.5 அடி. நீர் தேக்க அளவு 152 அடி. நீர் வெளியேற்றும் மதகுகள் 13. தடுப்பணையின் பணி மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றை தடுப்பது மட்டுமே. நீர்போக்கிகள், உபரி நீர் வெளியேறும் மதகுகள் என பிரதான சுவரில் எதையும் பார்க்க முடியாது. நீர் தேங்கும் இடம், உபரிநீர் வெளியேறும் இடம், தமிழகத்துக்கு நீர் எடுக்கும் சுரங்கப்பகுதி என அனைத்துமே ஒவ்வொரு திசையில் இருக்கும். அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாது. அணையில் மண் சேராது. அணை சுவரை அலைகள் மோதாது என பல அதிசயங்களை உள்ளடக்கியது. அணையில் தேங்கும் நீரை 6,100 அடி நீளம், 80 அடி அகலம், 60 அடி ஆழமான கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்கும் சுரங்க பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பும் வகையில், மலை பாறையில் 15 அடி அகலம், ஏழரை அடி உயரம், 5,704 அடி நீளத்தில் ஆங்கில எழுத்து ‘D’ வடிவில் குடையப்பட்ட சுரங்கம் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
சொந்த பணத்தை செலவிட்ட பென்னிகுவிக்
அடித்தளம் அமைக்கும் திட்ட மதிப்பீட்டைவிட 5 மடங்கு கூடுதல் செலவானது. இதனால் கட்டுமான பணியை நிறுத்திவிட்டு திரும்பி வரக்கோரி கர்னல் பென்னிகுவிக்குக்கு பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.
ஆனால் பென்னிகுவிக் இங்கிலாந்திலுள்ள தனது சொத்துகளை விற்று அதில் கிடைத்த பணத்தின் உதவியோடு 8 ஆண்டுகளில் உலகமே வியக்கும் வகையில் கம்பீரமான பெரியாறு அணையை 1895-ம் ஆண்டு கட்டி முடித்தார்.
லோகனின் சாதனை
பெரியாறு அணைக்கு நிகரான சவாலான பணியாக திகழ்ந்தது சுரங்கம் அமைக்கும் பணி. தேக்கடி மலைப்பகுதியிலிருந்து 1.98 கி.மீ. நீர்வழிப்பாதை, 1.79 கி.மீ. மலை குகைப்பாதை அமைக்கும் பணிக்கான பொறுப்பை ஆங்கிலேய பொறியாளர் இ.ஆர்.லோகன் ஏற்றிருந்தார். டர்பைன் மூலம் கடைசல் இயந்திரங்கள் இயக்கப்பட்டு, வெடிமருந்து மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டன. மிகுந்த சிரமங்களுக்கிடையே இப்பணியை லோகன் வெற்றிகரமாக முடித்தார். இவரது உழைப்பு, ஈடுபாடு பென்னிகுவிக்குக்கு அடுத்த நிலையில் இருந்ததால் இன்றும் விவசாயிகள் தங்கள் குழந்தைகளுக்கு லோகன், லோகன்துரை என்ற பெயரை வைத்து போற்றும் பழக்கம் தொடர்கிறது.
பல ஆயிரம் தொழிலாளர் உயிர் தியாகம்
வெள்ளம், குளிர் மற்றும் மலேரியா, காலரா போன்ற கொடிய நோய்களில் பலர் பலியானார்கள். ஆவணங்களில் உள்ள கணக்கின்படி 483 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் உண்மையான கணக்கு 10 ஆயிரத்தை தாண்டும் என்ற தகவலும் உள்ளது. சுரங்க வெடிவிபத்திலும் பலர் இறந்துள்ளனர். ஆங்கிலேயர் தரப்பில் கண்காணிப்பு அதிகாரி டைலர் உட்பட 18 பேர் இறந்துள்ளனர்.

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்!




தகவல் என்பது அறிவு அல்ல என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உண்மைதான். அதேசமயம், தகவல் ஒரு பெரும் அரசியல். சொல்லப்படும் தகவல்களைவிட சொல்லப்படாத தகவல்கள் கூடுதல் அரசியல் பெறுமதி உடையவை. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களைச் சமூகப் பின்னணியுடன் வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன சிக்கல்?
நேற்று முன்தினம் ‘வெல்த் எக்ஸ்’ நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. “அடுத்த மூன்று ஆண்டுகளில் - 2018-ல் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும்” என்றும் “இந்த எண்ணிக்கை அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில் - 2023-ல் அப்படியே இரட்டிப்பாகும்” என்றும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இது நடக்கச் சாத்தியமற்ற கதை அல்ல என்பதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ அமைப்பின் ஆய்வறிக்கை ஒரு சான்று. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு வேகமாக அதிகரித்திருக்கிறது என்பதைப் பட்டியலிட்ட அந்த ஆய்வறிக்கை பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை புணேவில் மட்டும் 317% அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியது.
ஒருபக்கம் நாடு வளர்கிறது, பொருளாதாரம் மேல் நோக்கி எழுகிறது என்றெல்லாம் இதுபோன்ற தகவல்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் சூழலில்தான், மறுபக்கம் தலைகீழான வேறு தகவல்களும் வெளியாகின்றன. எந்த அரசாங்கம் பொருளாதாரம் மேலே போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறதோ, அதே அரசாங்கம் தொகுத்த தகவல்கள் அமிலச் சொட்டுகளாக நம் மீது விழுந்து அதிரவைக்கின்றன.
சரிபாதி வறிய இந்தியா
இந்தியாவின் ஆன்மா எங்கிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, அந்தக் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 49% பேர் வறுமையில் இருக்கிறார்கள் என்கிறது. இந்திய அரசின் ‘சமூகப்பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு 2011'-ன் அறிக்கை. கிராமப்புற இந்தியாவில் உள்ள 17.91 கோடிக் குடும்பங்களில், 10.08 கோடிக் குடும்பங்களுக்கு (56%) சொந்தமாக ஒரு பிடி நிலம் கிடையாது. 13.34 கோடிக் குடும்பங்கள் (74.5%) ரூ.5000-க்கும் குறைவான வருமானத்திலேயே பிழைக்கின்றன. 9.16 கோடிக் குடும்பங்கள் (51%) வருமானத்துக்கு உடல் உழைப்பு வேலைகளையே நம்பியிருக்கின்றன. 5.39 கோடிக் குடும்பங்கள் (30%) விவசாய வேலைகளை நம்பியிருக்கின்றன. 4.21 கோடிக் குடும்பங்கள் (23.5%) இன்னமும் எழுத்தறிவு அற்றவை. கிட்டத்தட்ட 2.37 கோடிக் குடும்பங்கள் (13.25%) சுற்றிலும் மண் சுவர் எழுப்பி, ஒப்புக்கு மேலே கூரைபோல மஞ்சம் புல்லையோ, தென்னை ஓலைகளையோ கொண்டு மூடிய, கதவுகள் அற்ற அல்லது கோணிச் சாக்கு போன்றவற்றைக் கதவுபோல மூடிய கச்சா வீடுகளிலேயே வசிக்கின்றன.
நகர்ப்புற இந்தியாவின் நிலைமை கொஞ்சம் மேம்பட்டது என்றாலும், அங்கும் அவலங்கள் வேறு முகங்களில் வெளிப்படுகின்றன. நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 6.5 கோடிக் குடும்பங்களில், 65 லட்சம் குடும்பங்களை (10%) அடிப்படை வசதியான குடிநீர் வசதியே இன்னமும் எட்டவில்லை எனும் ஒரு தகவல் போதுமானது, நம்முடைய நகர்ப்புற ஏழைகளின் நிலையைச் சொல்ல. குடிநீரில் தொடங்கி குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என்று ஒவ்வொரு காரணிகளும் நகர்ப்புறப் பெரும்பான்மை இந்தியர்களை வேட்டையாடும் கதையைச் சொல்கின்றன.
யார் அந்தக் குப்பை பொறுக்கிகள்?
இந்தியச் சமூகக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நரம்புகளும் சாதிய அதிகார அடுக்குகளால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தையின் உணவு, உடை, வாழ்விடம், கல்வி, தொழில், திருமணம், எதிர்காலம் என யாவுமே அந்தக் குழந்தையின் சாதியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், சாதியின் பெயரால் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தள்ளப்பட்டவர்களையும் தூக்கிவிட இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கான வழிகளை நாம் தேடுகிறோம். ஆனால் உண்மையில், அரசின் சமூகநலத் திட்டங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைந்திருக்கின்றன? இதுவரை அளிக்கப்பட்டிருக்கும் சமூகநீதித் திட்டங்கள் எந்த அளவுக்குப் போதுமானவையாக இருந்திருக்கின்றன? இதற்கான நிச்சயமான பதில்கள் நம்மிடம் இல்லை.
டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்கிப் பிழைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், வெளியிலிருந்து தம் வீட்டுக்கு வரும் ஒரு அலுவலரிடம், “என் குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்; அதை வைத்துத்தான் பிழைக்கிறோம்” என்றோ, “என்னுடைய வீட்டுக்காரர் பிச்சை எடுக்கிறார்; அதை வைத்துத்தான் நாங்கள் பிழைக்கிறோம்” என்றோ எத்தனை பேர் நம்முடைய சமூகச் சூழலில் சொல்லிவிடுவார்கள்? கிராமப்புற இந்தியாவில் குறைந்தது, 4.08 லட்சம் குடும்பங்கள் குப்பை பொறுக்கிப் பிழைப்பதாகவும் 6.6 லட்சம் குடும்பங்கள் பிச்சையை நம்பிப் பிழைப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிச்சையையும் குப்பையையும் பிழைப்புக்கு வழியாக நம்பி வாழ்பவர்கள் எந்தெந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய இந்நிலைக்கான அடிப்படையான காரணங்கள் என்ன, அந்தக் காரணங்களில் சமூகம்சார் காரணிகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரிய வேண்டாமா?
மத்திய - மாநில அரசுகள் செய்வதென்ன?
சாதிவாரியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டால், இந்தியாவில் அழுத்தப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது மட்டும் வெளிவரப்போவதில்லை; மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய நிலைமை எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்கிற விவரங்களும் வெளியே வரும். கூடவே, ஆதிக்க அரசியல்வாதிகளின் உண்மையான முகமும் வெளியேவரும்.
இதே காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் யுனிசெப் அமைப்பின் ‘குழந்தைகள் தொடர்பான துரித ஆய்வறிக்கை’யின் தரவுகள் இதற்குச் சரியான உதாரணம். அரசின் ஆய்வறிக்கையோடு, இந்த ஆய்வறிக்கையை ஒப்பிடும்போது குஜராத், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் குழந்தைகளைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் நிலை மேம்பட்டதாக இருப்பது தெரியவருகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மோசம்; எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் அவர்கள் கடைசி அடுக்கிலேயே இருக்கிறார்கள் என்றாலும், மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய சமூகப் பொருளாதாரச் சூழலில் மாறுபாடு இருக்கிறது என்கிற உண்மையை ‘யுனிசெப்’ அறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் காட்டிலும் சத்தீஸ்கரில் உள்ள பெரும்பான்மைக் குழந்தைகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளியே வரும்போதுதான், முட்டை அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும். தமிழகப் பள்ளிகளில் மதிய உணவில் ஐந்து முட்டைகள் வழங்கப்படுவதற்கும் சத்தீஸ்கரில் சைவத்தின் பெயரால் முட்டையே மறுக்கப்படுவதற்கும் பின்னணியிலுள்ள அரசியல் வெளியேவரும். ‘குஜராத் மாதிரி’ என்று வளர்ச்சிக்கு உதாரணமாகக் கொண்டாடப்பட்ட குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயர்ந்திருக்கும் உண்மை வெளியே வரும்போதுதான், எந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சி, யாருக்கான வளர்ச்சி உண்மையான வளர்ச்சி எனும் சமூகநீதி அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும்.
குடிநீர் முதல் சுடுகாடு வரை சாதி ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில், ‘சாதி மறுப்பு’ அல்லது ‘சமூக நல்லிணக்க நோக்கம்’ என்ற பெயரில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிரீயிலான விவரங்களை மறைப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. மோடி அரசு சாதிவாரியிலான தகவல்களை உடனே வெளியிட வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in