Saturday, 25 November 2023

ஓங்கி ஒலித்த புரட்சி முழக்கம்!


 ஓர் இயக்கம் மக்கள் மத்தியில் வேர்பிடிக்க, வளர்ச்சி பெற ஒரு கருத்தியல் தேவைப்படுகிறது. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது. சமூக விடுதலை, பொருளாதாரச் சுதந்திரம் - சோஷலிஸமே தீர்வு என்கிற கருத்தியலை முன்னிறுத்தி, தொடக்கக் காலத்திலும் அடுத்தடுத்தும் கட்சியை வளர்த்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் என்.சங்கரய்யா. கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய முதல் தலைமுறைத் தலைவர்களான பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், சீனிவாச ராவ், கே.பி.ஜானகியம்மாள் போன்றவர்களோடு இணைந்து பணியாற்றியவர் சங்கரய்யா. அவருடைய வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய வரலாற்றின் ஒரு பகுதி!

விடுதலை வீரர்: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே நாட்டு விடுதலைக்காக மாணவர்களைத் திரட்டி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். பட்டப் படிப்பு இறுதி ஆண்டுத் தேர்வுக்கு 15 நாள்களுக்கு முன்னதாகக் காவல் துறை அவரைக் கைது செய்தது. “அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு, “நாட்டு விடுதலைக்காகச் சிறை செல்கிறோம் என்னும் உற்சாகத்தோடுதான் சென்றேன். பட்டப் படிப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை” என்றார் சங்கரய்யா.

முதன்மைத் தலைவர்: 1940இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த சங்கரய்யா, 1944இல் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தத்துவார்த்தப் பிரச்சினையின் காரணமாக, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய 32 தோழர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அமைந்த முதல் மத்தியக் குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 1967, 1977, 1980 என மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளராக 1995இலிருந்து 2002 வரையில் பணியாற்றினார். விவசாய சங்கத்தினுடைய அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆட்சித் தமிழ் தீர்மானம்: 1967இல் சங்கரய்யா சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது ஆட்சிமொழித் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய சங்கரய்யா, “தமிழ் மொழி நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக, பாட மொழியாக வர வேண்டும். ஆட்சிமொழி என்பதன் பொருள் அதுதான். ஆனால், அப்படி வர வேண்டும் என்று மட்டும் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. இதையெல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதை அன்றைய முதலமைச்சர் அண்ணா ஏற்றுக்கொண்டார். அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஆட்சித் தமிழுக்காக அவர் சட்டமன்றத்தில் கொடுத்த குரல் முக்கியமானது.

சரியான தீர்வு, சார்பற்ற ஆலோசனை: 1996இல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களைத் தடுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார். சென்னை ராஜாஜி அரங்கில் இரண்டு நாள்கள் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சங்கரய்யாவுடன் நானும் பங்கேற்றேன். அப்போது சங்கரய்யா, “தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். சாதி மோதல்கள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கப்பட வேண்டும்” என்று கூறினார். இந்த வரிசை மிக முக்கியமானது. தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை ஒழிக்காமல் சாதி மோதல்களைத் தடுக்க முடியாது.

சாதி மோதல்களைத் தடுக்காமல் மக்கள் ஒற்றுமையைப் பெற முடியாது. கூட்டத்தின் முடிவில் கருணாநிதி பேசியபோது, சங்கரய்யா கூறியதை மேற்கோள் காட்டிப் பேசினார். “தோழர் சங்கரய்யா சுட்டிக்காட்டியதுபோல அரசாங்கம் நடவடிக்கைஎடுக்கும்” என்றும் அறிவித்தார். பின்னர் சமத்துவபுரங்களை அவர் உருவாக்கினார். சங்கரய்யாவோ தனது குடும்பத்தையே சமத்துவபுரமாக்கி வாழ்ந்துகாட்டினார். இப்படியாகக் கட்சிக்குள் நடைபெறும் கூட்டங்கள் என்றாலும், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்றாலும் குறிப்பிட்ட பிரச்சினைக்குச் சரியான தீர்வு எது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக பளிச்சென்று சுட்டிக்காட்டுபவராக சங்கரய்யா இருந்தார்.

1998இல் கோவை குண்டுவெடிப்பு, மதக் கலவரங்கள் நடந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாநிலச் செயலாளர் சங்கரய்யாவோடு பேச விரும்புவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அப்படிப் பேசும்போது சொல்லியிருக்கிறார், “என்.எஸ்! இந்தப் பிரச்சினை தொடர்பாக உங்களிடம்தான் முதலில் ஆலோசனை கேட்கிறேன். ஏனென்றால், நீங்கள்தான் சார்புகள் இல்லாமல் ஆலோசனை சொல்வீர்கள்” என்று. இப்படி அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றுக்குப் பக்கச்சார்பின்றி ஆலோசனைகளை வழங்குவதற்கான அனுபவமும் அறிவும் சங்கரய்யாவுக்கு இருந்ததை நாங்கள் பலமுறை உடனிருந்து பார்த்திருக்கிறோம்.

தலைமையை மதித்த தொண்டர்: 2002இல் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து சங்கரய்யா விடுவிக்கப்பட்ட பிறகு என்.வரதராஜன் அந்தப் பதவிக்கு வந்தார். அதற்குப் பிறகு நான் வந்தேன். எனக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் இப்போது அந்தப் பதவியில் இருக்கிறார். சங்கரய்யா, செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மாநிலச் செயற்குழு, மாநிலக் குழு, மத்திய செயற்குழு முடிவுகளைப் பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். யாராவது கட்சியின் முடிவுகள் குறித்துக் கேட்கும்போது, “மாநிலச் செயலாளரிடம் கேளுங்கள்” என்று சொல்லிவிடுவார். கட்சி சார்பாக ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டால்கூட மாநிலச் செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சம்மதம் தெரிவிப்பார். அந்த வகையில் மாநிலச் செயற்குழுவுக்கும் செயலாளர் பதவியில் இருப்பவருக்கும் முழுமையான மரியாதையை அளித்தார்.

அனைவரும் தோழர்களே! - நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். 1989இல் ஏ.நல்லசிவம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தபோதுதான் நான் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டேன். அப்போது சங்கரய்யாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. கட்சியின் மிகப் பெரிய தலைவரான அவர் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களிடமும் பதவி, வயது வேறுபாடு பார்க்காமல் பழகுவார். அவர் பேசுவதும் பழகுவதும் இளம் தோழர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக இருக்கும். முதல் தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இணைப்புக்கண்ணியாக அவர் இருந்தார்.

கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நினைவில் வைத்திருப்பார். அவர்கள் எல்லோரைப் பற்றியும் பெயரைச் சொல்லி நலம் விசாரிப்பார். அந்த அளவுக்கு அபாரமான நினைவுத் திறன் அவருக்கு இருந்தது. தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர் சங்கரய்யா. அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியம் குறித்தும் ஆழமாக விவாதிக்கக்கூடிய திறனைப் பெற்றிருந்தார். மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைக் கவிதை வடிவில் மு.கருணாநிதி எழுதியபோது, சங்கரய்யாவிடம்தான் முன்னுரை பெற்றார்.

புரட்சி முழக்கம்: 82 ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளார் சங்கரய்யா. கடைசியாக, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு, 2023 நவம்பர் 7 அன்று அதற்கான விழா நடைபெற்றபோது அவரால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை. அவருடைய வாழ்த்துச் செய்தியை உரையாக ஒலிபரப்பினோம். தன்னுடைய சிம்மக்குரலில், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்னும் முழக்கத்துடன்தான் அந்த உரையை முடித்திருந்தார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கில் இடப்படுவதற்கு முன் ஒலித்த முழக்கம் அது. இறப்பதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு ஆற்றிய கடைசி உரையில் சங்கரய்யா எழுப்பிய அந்த முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி!

- தொடர்புக்கு: grcpim@gmail.com

கழிப்பறை: தனிமனித கண்ணியத்தின் ஒரு பகுதியே


 “இந்தியாவுக்குச் சுதந்திரத்தைவிடச் சுகாதாரம் தான் முக்கியம்” என மகாத்மா காந்தி சொல்லி 98 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுகாதாரம் மேம்படுவதற்குக் கழிப்பறையும் அவசியம். கழிப்பறையைப் பயன்படுத்துதல் தனிமனித நலன் சார்ந்தது மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. இன்றைய நவீன யுகத்தில் எவ்வளவோ விஷயங்களைச் சாதித்துவருகிறோம். எனினும், கழிப்பறை விஷயத்தில் ஏன் இந்தியா இன்னமும் முன்னேற்றம் காணவில்லை?

கழிப்பறை இல்லை: உலகில் 420 கோடிப் பேர், அதாவது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறை உள்ள சூழலில் வாழ்கின்றனர் என்றும் 67 கோடியே 30 லட்சம் பேர், மலம் கழிக்கத் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாகவும் ஐ.நா. குழந்தைகள் நிதியமும் (யுனிசெப்), உலக சுகாதார நிறுவனமும் சொல்கின்றன. ஏழு நபர்களில் ஒருவர் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருவதாக யுனிசெப் கூறுகிறது.

“கிராமங்களில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோருக்குக் கழிப்பறை வசதி இல்லை” என தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. “கிராமப்புறக் குடும்பங்களில் 28.7% வீடுகளுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அவர்கள் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்” என்கிறது குடிநீர், சுகாதாரம் - வீட்டுவசதி நிலை குறித்த அறிக்கை. ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட 42% கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இது தமிழ்நாட்டில் 37%; ராஜஸ்தானில் 34% என உள்ளது. “96.2% நகர்ப்புறக் குடும்பங்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன” என்று தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

பள்ளிகளில்... “இந்தியாவில் 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை” எனக் கூறியிருக்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால். இந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உண்டு. தமிழ்நாட்டில் கழிப்பறை வசதி இல்லாத 2,391 அரசுப் பள்ளிகளின் பட்டியலை 2020ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்படைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட செய்தியில், 2020இல் நடத்தப்பட்ட ஆய்வில், 40% அரசுப் பள்ளிகள் போதிய கழிப்பறைகள் இல்லாதவை அல்லது பயன்படுத்த முடியாதவை எனக் கண்டறியப்பட்டது. ஏறக்குறைய 72% கழிப்பறைகளில் போதிய நீர் இல்லை. தேவையான துப்புரவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக, 23% பெண்கள் பருவமடைந்த பின்னர் பள்ளிப் படிப்பைவிட்டு வெளியேறும் அவலமும் நேர்கிறது.

பாதிப்புகள்: பொதுவாகப் போதிய சுகாதார வசதிகள் இல்லாதது, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் ஆகியவை வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நீர் மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவில் இந்த நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,000 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்கிறது யுனிசெப். உயரத்துக்கு ஏற்ற எடையைக் கொண்டிருப்பதிலும் இந்தியக் குழந்தைகள் பின்தங்கியே உள்ளன. இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு, கழிப்பறையைப் பயன்படுத்தாததும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமும் பரவலாக இருப்பதே காரணம்.

முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள்கூட நோய்களைப் பரப்பும் மையங்கள்தான். இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கும் மக்களுக்கும் உண்டு. நகர்ப்புறங்களில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் பொதுக் கழிப்பறைகளின் தேவை அதிகம். தவிர, ஏழை-எளிய மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்படும் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. கழிப்பறைக்குத் தேவைப்படும் தண்ணீர் வசதி, மின் வசதி, பாதுகாப்பு போன்றவற்றையும் அரசு வழங்க வேண்டும். முதியவர்களின் பயன்பாட்டுக்காக மேற்கத்திய வகை கழிப்பறைகளும் ஆங்காங்கே இருத்தல் நலம்.

பொருளாதார இழப்பு: போதிய கழிப்பறை வசதிகள், சுகாதார வசதிகள் இல்லாததால், ஒவ்வோர் ஆண்டும், ரூ.2.4 லட்சம் கோடியை இந்தியப் பொருளாதாரம் இழந்து வருகிறது என்று உலக வங்கியின் அங்கமான, நீர்-சுகாதாரத்துக்கான இயக்கம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆகும். அகால மரணங்கள், சிகிச்சை செலவு, நோய் காரணமாக வேலை நேர இழப்பு, வருமானம் இழப்பு போன்றவற்றால் இந்த இழப்புகள் நேர்கின்றன. அதாவது, சுகாதாரம் இல்லாததால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.1,200 கோடி அளவுக்குச் சுற்றுலாத் துறையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளின் அருகே மலம் கழிக்கப்படுவதால், குடிநீர் சுத்திகரிப்பதற்கு ஆண்டுதோறும், ரூ.11,200 கோடி செலவாகிறது. சுகாதாரமற்ற குடிநீர், கழிப்பிடங்களால் ஏற்படும் உடல்நலக் குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் ரூ.21,700 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கழிப்பறையின் அவசியம்: சுகாதாரத்தை ஓர் அடிப்படை மனித உரிமையாக ஐ.நா. அங்கீகரிக்கிறது. சுகாதார வசதிகளைப் பெறுவது என்பது ஒருவரது அடிப்படை உரிமையாகும். கழிப்பறை வசதி தனிநபர்களின் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. நோய்களைத் தடுப்பதிலும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் பெண்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது. பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாதது, குறிப்பாகப் பெண் குழந்தைகள் கல்வி கற்கத் தடையாக இருப்பதை மறுக்க முடியாது. கழிப்பறை மேம்பாடு என்பது, மருத்துவச் செலவுகளைக் குறைக்கிறது. சுற்றுச்சூழலையும் நீராதாரங்களையும் பாதுகாக்கிறது. பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துகிறது. காலரா, டைபாய்டு போன்ற நீர்வழி நோய்களின் பரவலைத் தடுக்கிறது. நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது.

என்ன செய்ய வேண்டும்? - 2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான கழிப்பறைகள் - தண்ணீர் என்கிற சுகாதார இலக்கை ஐ.நா. நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த இலக்கை அடைய உலகம் இன்னும் ஐந்து மடங்கு வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. “2015 முதல் 2020 வரை, இந்தியாவில் 6,00,000 கிராமங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் அற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன” என அரசு கூறுகிறது. கழிப்பறை குறித்து மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர் மத்தியில் இதன் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளிக் கழிப்பறைகளில் மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரத்துக்கான கூடுதல் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். கழிப்பறைகளைப் பராமரிப்பதில் தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். பயன்படுத்துவதற்கான தண்ணீர், தேவையான துப்புரவுச் சாதனங்கள், கிருமிநாசினிப் பொருள்கள் இருக்க வேண்டும். இவை கிடைக்க உள்ளாட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

உள்ளாட்சிக் கூட்டங்களிலும் கிராமசபைக் கூட்டங்களிலும் கழிப்பறைத் தேவைகள் குறித்து மக்கள் பேச வேண்டும். பொதுக் கழிப்பறைகளில் புகார் பெட்டி வைக்கலாம். பத்து நாள்களுக்கு ஒருமுறை இந்தப் புகார்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்கலாம். கழிப்பறைகள் பராமரிப்பை எளிமைப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குறைந்த தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகளை ஏற்படுத்தலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தனியார் ஓட்டல்களின் கழிப்பறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதைக் காண்கிறோம். அதுவும் அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால், மாநகராட்சிகளின் கட்டணக் கழிப்பறை முகம் சுளிக்க வைப்பது ஏன்? தனி மனித ஆரோக்கியம், நாட்டின் பொருளாதார இழப்பைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, கழிப்பறைகள் மீதும் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியம்.

- தொடர்புக்கு: thirugeetha@gmail.com

Sunday, 5 February 2017

அண்ணா ஒருநாள் இந்தியாவுக்குத் தேவைப்படுவார்!

                  அன்றைக்கு கொல்கத்தாவிலுள்ள வங்க அகாடமியில் இருந்தேன். “தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு இனி ஒன்பது மாதங்களாக உயர்த்தப்படும்” என்று அப்போதுதான் அறிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. நான் சந்தித்த நண்பர்கள் இதுபற்றிப் பேசலானார்கள். “இது முற்போக்கான முடிவு; இது மட்டும் அல்ல, நிறைய. விலையில்லா அரிசி, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள், மடிக்கணினி, ஒரு ரூபாய் இட்லி… தமிழ்நாடு தொடர்பாக மம்தா நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருக்குத் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி” என்றார்கள்.
கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மாநிலம் சமூக நலத்திட்டங்களின் தாக்கங்களைப் பற்றி இப்போது நிறைய யோசிக்கிறது. இந்த ஆண்டு ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையும் அவர்களைக் கவனிக்க வைத்திருந்தது. “உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்த ஜெயலலிதா, ‘பொதுச் சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மசோதா’ விவகாரத்தில் நாட்டிலேயே தனித்து நிற்கும் முடிவை எடுத்ததையும் ஆச்சரியமாகப் பேசினார்கள்.
தொடர்ந்து நாடு முழுக்க அரசியலில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் எப்படி விடாமல் திராவிடக் கட்சிகளுடனேயே பயணிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுடைய பெரிய சந்தேகம், “திராவிடக் கட்சிகள் சிந்தாந்த வலுவற்றவை. அவற்றுக்குத் திட்டவட்டமான கொள்கை ஏதும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. எனினும், ஆச்சரியமான காரியங்கள் தமிழ கத்தில் தொடர்ந்து நடக்கின்றனவே எப்படி?”
தமிழ்ச் சமூகத்தின் தேவை திராவிட இயக்கம்
தமிழகத்துக்கு வெளியே நம்மூர் பேச்சு அடிபடும்போது இப்படி திராவிட இயக்கத்தினரின் ‘சித்தாந்த வறட்சி’யைப் போய் விவாதம் தொடுவது இயல்பானது. நான் அவர்களிடம் சொன்னது: ‘‘சாமானிய மக்கள் ஒரு அரசியல் இயக்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கையில், அதன் எதிர்காலச் சித்தாந்தங்களைப் பற்றி அல்ல; சமகாலத் தேவைகளுக்கு அது என்ன தீர்வுகளை முன்வைக்கிறது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சமூகமும் அதன் தேவைக்கேற்ற ஆட்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கிக்கொள்கிறது. தமிழ்ச் சமூகம் தன்னுடைய தேவையின் நிமித்தம் உருவாக்கிக்கொண்டது திராவிட இயக்கம். சித்தாந்தங்கள் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் சமகால அபிலாஷைகளும் கலாச்சாரமுமே திராவிட இயக்கங்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. மக்கள் அமைதியாக இருந்தால், அவர்களே மது ஆலைகளை நடத்துவார்கள்; மக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களே மதுவிலக்கையும் கொண்டுவருவார்கள்.
அரசு உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறார்கள், ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி கொடுக்கிறார்கள், பள்ளி மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களும் மடிக்கணினிகளும் கொடுக்கிறார்கள், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது, ‘ஒரே நாடு - ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு நாடு முழுக்க ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை இந்திய அரசு கொண்டுவரும்போது, தமிழகம் மட்டும் அதை எதிர்க்கிறது… இப்படி இன்றைக்குத் தமிழகம் சார்ந்து பெருமிதத்தோடு பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. திராவிட அரசியலின் முதல் ஆட்சிப் பிரதிநிதி அண்ணாவினுடைய அரசியல் தொடர்ச்சி இவை. அன்றாட அரசியலில் எவ்வளவு கீழே விழுந்தாலும், சில தருணங்களில் அவர்கள் தீர்மானிக்கும் அண்ணா பாணி முடிவுகள் அவர்களை உயிர்ப்போடு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்த்துவிடுகின்றன. தமிழ் மக்களின் அடியாதார இயல்பிலிருந்து பெரிய அளவில் விலகிவிடாமல், காலத்தோடு ஒன்றிப் பயணிக்கும் வரையில் திராவிட இயக்கத்தினரை எவரும் அசைக்க முடியாது!”
தமிழக அரசியலில் அண்ணாவுக்கு இன்றைக்கும் மதிப்பு இருக்கிறதா என்று அவர்கள் கேட்டார்கள். அண்ணாவின் மூன்று அரசியல் முழக்கங்களுக்கு இந்திய அரசியலில் என்றைக்கும் மதிப்பிருக்கும் என்று நான் சொன்னேன். 1.தேசியம் எனும் பெயரில் இன்றளவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘இந்தி, இந்து, இந்தியா’ எனும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் வளைக்க நடக்கும் அரசியலைத் துல்லியமாக அம்பலப்படுத்தி, இந்திய ஒன்றியத்தின் உண்மையான நீட்சிக்காக அவர் இறுதிவரை குரல் கொடுத்த மாநிலங்கள் சுயாட்சி. 2.இருமொழிக் கொள்கை என்ற பெயரில், தாய்மொழியோடு துணை மொழியாக அவர் கொடுத்துச்சென்ற ஆங்கிலம். 3.வெகுஜன மயக்குத் திட்டங்கள் என்ற பெயரில் டெல்லியின் மேட்டுக்குடி வர்க்கம் திட்டமிட்டு கொச்சைப்படுத்திவரும், அவர் வழிகாட்டிய சமூகநலத் திட்டங்கள்.
வட கிழக்கு சமிக்ஞைகள்
என்னுடைய சமீபத்திய பயணம் அண்ணாவை நிறையவே ஞாபகப்படுத்தியது. ஒரு முனையில் காஷ்மீர் இரு மாதங்களுக்கும் மேல் போராட்டங்களால் முற்றிலும் நிலை குலைந்திருக்கும் நிலையில், இன்னொரு முனையில் வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி ஆட்சியாளர்கள் தம் பாதையை மாற்றிக்கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அருணாசலப் பிரதேசத்தில், முதல்வர் பேமா காண்டு 42 உறுப்பினர்கள் சூழ கூண்டோடு காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவியிருப்பது அங்கு நிலவும் அவல அரசியல் சூழலுக்கு ஓர் உதாரணம். நிலையில்லா ஆட்சி. 10 உறுப்பினர்களைச் சேர்த்தால் எவரும் ஆட்சியில் கொந்தளிப்பை உண்டாக்கிவிடலாம். எங்கும் ஊழல். வீதிதோறும் இளைஞர்கள் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இந்தியாவுடன் இணைக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்த பின்னரும்கூட இன்னமும் மனதளவில் பெரும்பான்மையோர் விலகியே நிற்கிறார்கள். பிரிவினைவாதச் சுவரொட்டி இல்லாத ஒரு மாநிலம் கிடையாது. இன்றைய வட கிழக்கு மாநிலங்களின் 90% வருவாய் மத்திய அரசின் நிதியிலிருந்து செல்கிறது. பிரதான சாலைகள் எங்கும் ராணுவப் படைகள் நிற்கின்றன.டெல்லியிலிருந்து வீரர்கள், நிதி விநியோகம் நிறுத்தப்பட்டால், அடுத்த நாள் என்னவாகும் என்பதை யோசிப்பதற்கான தேவையே இல்லை. சூழல் கொஞ்சம் தேவலாம் என்று கருதத்தக்க மாநிலம் திரிபுரா. தனி திரிபுரா பிரிவினைவாத கோஷம் முடக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஏற்கெனவே சின்ன மாநிலமான அதைப் பிளந்து, பழங்குடிகளுக்கு என்று தனி மாநிலம் கேட்கும் குரல்கள் வலுவடைகின்றன.
திரிபுராவில் இருந்தபோது முதல்வர் மாணிக் சர்க்காரைச் சந்தித்தேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக முழு பலத்துடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர். “மக்கள் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள். மத்திய அரசோ அதிகாரக் குவிப்பு நடத்துகிறது. நாளுக்கு நாள் மாநிலங்களிடம் உள்ள கொஞ்சநஞ்ச அதிகாரங்களும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. தூக்கவே முடியாத சுமையைச் சுமக்க ஆசைப்படுகிறது டெல்லி. பெரிய ஆபத்து. ஆனால், இதுபற்றி தமிழகம் போன்ற சில மாநிலங்கள் தவிர, வேறு யாரும் பேசத் தயாராக இல்லை”என்றார்.
உள்ளூர் சமூகங்களை ஒன்றிணைத்துப் பிரிவினை வாதத்தை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள் என்கிற திரிபுரா அனுபவத்தை மாணிக் சர்க்காரிடம் கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. திரிபுரா அனுபவங்களை எழுதி அனுப்பிய மாணிக் சர்க்கார் அதில் குறிப்பிட்ட அடிப்படையான செய்தி, “இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. அவரவர் பிரச்சினைகளுக்கான தீர்வை அவரவர் சொந்தச் சூழலிலிருந்தே கண்டடைய முடியும்.”
கோளாறுகளின் வேர்
நாம் மோடியை மட்டுமே குற்றஞ்சாட்டுவதில் பிரயோஜனம் இல்லை. கோளாறின் வேர் உலகிலேயே பெரியதான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. காலனியாதிக்க பிரிட்டிஷ் அரசு 1935-ல் கொண்டு வந்த சட்டத்தின் நீட்சியே நம்முடைய சட்டம். 1946 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளே சுதந்திர இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் சபையில் பெரும் பங்கு வகித்தவர்கள். அந்நாட்களில் வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை கிடையாது. நிலவுடமையாளர்கள், ஆதிக்கச் சாதியினர், புதிதாக உருவாகிவந்த மேட்டுக்குடி வர்க்கம் என்று உண்மையில் ஆதிக்கச் சக்திகள் பெரும்பான்மை வகித்த சபை அது.
சுதந்திரத்துக்குப் பின் அதிகாரத்தில் உட்காரும் உத்வேகத்தில் இருந்த காங்கிரஸ் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில், யானைக்கும் பூனைக்குமான இடைவெளி பலத்தோடு சபையில் பிரமாண்டமாக உட்கார்ந்திருந்தது. 1935-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தபோது எதிர்த்த அதே சட்டத்தை இப்போது சுவீகரித்துக்கொள்வதில் அதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்கிரஸ்காரர்களுக்கு காந்தி சங்கடமான சுமையாக மாறியிருந்தார். “அதிகாரப் பரவலாக்கத்தில் எத்தனை பேர் உறுதியும், நம்பிக்கையும் கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. மாறாக, இந்தியாவை முதல் தரமிக்க ராணுவ சக்தியாகவும், வலிமையான மத்திய அரசு; அதையொட்டியே ஏனைய அமைப்புகள் என்பதுமான அமைப்பாக்கவே பலர் விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அரசியலமைப்பு சபை தொடர்பான தன்னுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினார் காந்தி.
அதிகாரக் குவிப்பைப் பெரும்பாலானோர் ஆதரித்தார்கள். “பிரிட்டிஷ் ஆட்சிக் கால 1935 இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் அமைந்த மத்திய அரசைவிட, மிக வலிமையான ஒன்று அமைவதை நான் விரும்புகிறேன்” என்றார் அம்பேத்கர். நாட்டை அந்நாளில் கொந்தளிக்கவைத்த பிரிவினை கோஷங்களும் இனக் கலவரங்களும் அதிகாரக் குவிப்பு முடிவுக்கான நியாயங்களைக் கற்பித்தன.
நாட்டின் தேசிய மொழியைத் தேர்ந்தெடுக்கும் விவாதம் மோசமாகப் பெரும்பான்மைவாதத்தைப் பிரதிபலித்தது. 1946 டிசம்பர் 10 கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.வி.துலேகர், “இந்துஸ்தானி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் தங்க உரிமை இல்லை. இந்திய அரசியலமைப்பை உருவாக்க இங்கு வந்திருப்பவர்களுக்கு, இந்துஸ்தானி தெரியாது என்றால், இச்சபையில் உறுப்பினர்களாக இருப்பதற்கே அவர்களுக்குத் தகுதியில்லை” என்றார்.
காந்தி எனும் சுமை
தன் கையில் காங்கிரஸின் லகான் வரத் தொடங்கியது முதலாகவே மொழிவாரி மாநிலங்கள் எனும் சிந்தனையை நோக்கி அதை வழிநடத்தியவர் காந்தி. 1920 நாக்பூர் மாநாட்டுக்குப் பின் மொழிவாரி பிராந்தியக் கிளைகளைப் பெரிய அளவில் அமைக்கத் தொடங்கியிருந்தது காங்கிரஸ். தன்னுடைய மரணத்துக்குச் சில நாட்கள் முன்னர்கூட - 1948, ஜனவரி 25 பிரார்த்தனைக் கூட்டத்தில் - மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் காந்தி. எனினும் தேசப் பிரிவினைக்குப் பின் நேரு மற்றும் சகாக்களின் சிந்தனை மாறிவிட்டிருந்தது.
மாநிலங்களுக்கான உரிய அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விஷயத்தில் நேரு முறையாகச் செயல்படவில்லை. நேருவுக்குப் பிந்தைய காங்கிரஸின் செயல்பாடு மேலும் மோசமானது. மாநிலங்களிடையேயான சுமுக உறவுக்காக 1950-ல் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ‘மாநிலங்களிடை மன்றம்’ தனது முதல் 39 ஆண்டு வரலாற்றில் ஒருமுறைகூடக் கூடவில்லை என்பதும், 2016-ல் சமீபத்தில் கூடிய கூட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூடியது என்பதும் மாநிலங்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு காட்டிவரும் தொடர் அலட்சியத்துக்கு ஓர் உதாரணம். மாநிலங்களின் உரிமைகளை யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களையெல்லாம் பிரிவினைவாதிகளாகக் கட்டமைப்பதையும் அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை ஏவுவதையும் ஒரு உத்தியாகவே கையாண்டன தேசியக் கட்சிகள். பின்னாளில், தன்னுடைய ஆட்சிக் காலகட்டங்களில் 50 முறை மாநில அரசுகளின் ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி.
உண்மையான தேசியத்தின் குரல்
ஆக, இன்றைக்கு அதிகாரப் பரவலாக்கத்தை மையமாகக் கொண்ட, வலுவான மாநிலங்களுக்கு வழிவகுக்கக்கூடிய, சுதந்திர இந்தியா தன்னுடைய எல்லாத் தரப்புகளுக்கும் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கத் தக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கான குரல்கள் ஒலிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால், பலர் இதுபற்றி யோசிக்கவே பயந்த காலகட்டத்தில் உரக்கப் பேசியவர்களில் முக்கியமானவர் அண்ணா: “மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிற போது, ‘இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும், நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும்’ என்று காங்கிரஸார் கூறுகின்றனர். நான் பணிவன்போடும், உறுதியோடும் கேட்பேன்: நாட்டுக்கு ஆபத்து வரும் என்று அறிந்து கூறும், நாட்டை வலிமையுள்ளதாக்கும் உரிமையும் வழிகாட்டும் திறமையும் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நினைத்துப் பேசும் முழு உரிமை யாரால், எப்போது, எந்தக் காரணத்தால் உங்களுக்கு அளிக்கப்பட்டது?”
இந்தியா மாநிலங்களால் ஆளப்படுகிறதே தவிர, மத்திய அரசால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்: “மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. அதிகாரம் தேவைக்கு அதிகமாக மைய அரசிலே குவிந்துவிட்டதால் என்ன நடக்கிறது? நான் அண்மையில் டெல்லி உணவு அமைச்சகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அமைச்சர் ஷிண்டே பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையிலிருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டெல்லியிலிருந்து வராததால் பெருத்த நஷ்டம் உருவாகும் சூழல் உருவாகியிருப்பதை அவருக்குக் கூற முயன்றோம். கள்ளக்குறிச்சி என்ற பெயரை அவர் புரிந்துகொள்ள 15 நிமிடங்கள் ஆயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர் மீது நான் குற்றம்சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இங்கே தமிழ்நாட்டில்; அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அங்கே டெல்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துத் தந்தார்களே அவர்களே குற்றவாளிகள். மத்திய அரசின் வலிவு, அசாமுக்கு அச்சமூட்ட, தமிழ்நாட்டைத் தத்தளிக்கவைக்க, கேரளத்துக்குக் கலக்கமுண்டாக்கத்தான் என்றால், நமது சுதந்திரச் சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து, சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத்தான் என்றால், நமது கூட்டுச் சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்!”
தன்னுடைய மரணத்துக்கு முந்தைய தொண்டர்களுக்கான கடைசிக் கடிதத்தில்கூட, “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரம் பெறத் தக்க வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்று அண்ணா எழுப்பிய குரல் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தானது அல்ல; இந்திய மாநிலங்களின் தேசியக் குரல் அது!
மொழி வெறும் அடையாளமா?
1963-ல் இந்தியை ஆட்சி மொழியாக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்தபோது, அண்ணா மாநிலங்களவையில் பேசிய வார்த்தைகள் தமிழர்க்கானவை மட்டும் அல்ல. “நாட்டின் மக்கள்தொகையில் 42% பேர் இந்தி பேசுவதால், இந்தியை ஆட்சிமொழியாக்க இங்கு பேசியவர்கள் வாதிட்டார்கள். இந்த 42% மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தால், அவர்களுடைய வாதம் சரியானதாக இருக்கலாம். ஆனால், அந்த 42% மக்கள் உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என அருகருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள். இதை ஒரு பெரும்பான்மை இனக் குறியீடாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தி மாநிலங்களில் இந்தியை அறிந்த மக்களுக்கு இந்தி தாய்மொழி. இந்தியே அம்மாநிலத்தின் ஆட்சிமொழி. இந்தியே பயிற்றுமொழி. அதே இந்தியே மத்திய அரசின் ஆட்சிமொழி. ஆக, இந்தி பேசும் மக்கள் பலப் பலப் பயன்களை அடைவார்கள். ஆனால், இந்தி பேசாத மாநிலங்கள் மீது பலப் பல சுமைகளை ஏற்றுகிறீர்கள். இந்தி ஆட்சி மொழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்!”
தமிழைக் காட்டிலும் மொழி வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டும் ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலம் வங்கம். வங்காள அகாடமியில் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைக்கு எல்லாவற்றையும் தாண்டியும் இந்தி வங்கத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது என்றார்கள். கர்நாடகத்திலும் இதே நிலைமைதான் என்கிறார் கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்த தமிழ் எழுத்தாளரான வாஸந்தி. ஆந்திரத்தில், மஹாராஷ்டிரத்தில், குஜராத்தில் எங்கும் இதே கதை என்கிறார்கள் உள்ளூர் நண்பர்கள். பண்பாட்டிலும் இது பெரும் சேதங்களை உருவாக்கியிருக்கிறது. சொந்த மொழியில் சினிமாவைக்கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள். தமிழகமோ தனித்து நிற்கிறது. நேற்று எங்கள் அலுவலகம் பக்கத்திலுள்ள டீக்கடைக்காரர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார், “இந்தி தெரிஞ்சா வேலை கிடைக்கும்னா உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார்லேர்ந்து இவ்ளோ பேர் ஏன்டா நம்மூருக்குக் கூலி வேலைக்கு வராய்ங்க?”
அடையாளம் மட்டும் அல்ல; மொழி பெரிய அதிகாரம். சிறுபான்மைச் சமூகங்கள் மொழிரீதியிலான ஆதிக்கத்தை அனுமதித்தால், தொடர்ந்து எல்லா ஆக்கிரமிப்புகளுக்கும் அடிமையாக வேண்டும் என்பதை அண்ணா முழுக்க உணர்ந்திருந்தார். அதனாலேயே தமிழ்ச் சமூகம் உலகோடு பேச ஆங்கிலத்தைத் துணைமொழியாக அவர் முன்மொழிந்தார். “இந்தியா முழுக்கப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்றால், பின் இந்திக்கான தேவை என்ன?” என்று கேட்டு இருமொழிக் கொள்கை மூலம் ஆங்கிலத்தை நோக்கித் திருப்பியதன் விளைவாகவே இன்றைய உலகமயச் சூழலில் தமிழ்ச் சமூகம் சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கமாகிவருகிறது.
மீனா, தூண்டிலா எது தேவை
பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது ஒரு அணுகுமுறை. பசியில் துடித்துக்கொண்டிருப்பவனின் உடனடி உயிர்த் தேவை மீன்; அவன் உயிர்த்திருக்க ஒரு மீனையும் கூடவே தூண்டிலையும் தருவது இன்னொரு அணுகுமுறை. அண்ணாவினுடையது இரண்டாவது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி எனும் முழக்கத்தோடு ஆட்சியில் ஏறிய அவருடைய இயக்கத்தின் விளைவாகவே சமூகநீதிக்கான முன்னோடி மாநிலமாகத் தமிழகம் மாறியது. அரசியலமைப்புச் சட்டத்தையும் மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்களையும் ஆய்வுக் குள்ளாக்கும் ஆணையத்தை கருணாநிதி உருவாக்கினார். மாநிலச் சுயாட்சி தீர்மானத்தைப் பின்னாளில் திமுக நிறைவேற்றியது. இடஒதுக்கீட்டை ஜெயலலிதாவின் அதிமுக உறுதிப்படுத்தியது.
வங்கத்தைப் போலவே ஆந்திரமும் கர்நாடகமும் குஜராத்தும் பஞ்சாப்பும்கூட தமிழகத்தின் செயல்பாடுகளைக் கவனித்துவருவதாக வங்கத்து நண்பர்கள் சொன்னார்கள். ஏனைய எல்லா இந்திய மாநிலங்களுக்குமே ஒருநாள் அந்தத் தேவை உருவாகும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

கச்சா எண்ணெய் அகற்றும் தன்னார்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்








எண்ணூரில் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடல் சார் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு களத்தில் இறங்குவது அவசியமாகிறது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். 

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடலில் சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது. 

அவ்வாறு பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்படுகளை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். 

கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு பற்றி முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனரும் தோல் நிபுணருமான இளங்கோவனிடம் 'தி இந்து' இணையதள செய்திப் பிரிவு கேட்டறிந்தது. 

"பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது"
தன்னார்வலர்களுக்கு இளங்கோவன் கூறியதாவது, கச்சா எண்ணெயை வெறும் கைகளில் அகற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெறும் கைகளில் அள்ளும்போது கச்சா எண்ணெய் தோலில் நேரடியாக ஊடுருவினால், ஆயில் பாலிக்ளைடீசியே, ஒட்டு தரப்பான் போன்ற வியாதிகள் உண்டாகலாம். 

கைகளில் புண்கள் ஏற்படலாம். சரும நோய்கள் ஏற்படலாம்.
தோலில் எரிச்சல் உண்டாகலாம். 

கச்சா எண்ணெய் உள்ளுறுப்புகளில் சென்றால் மட்டுமே மிகப் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றபடி பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. 

"கையுறையே போதும்"
தன்னார்வலர்கள் நல்ல அடர்த்தியான கையுறைகளை அணிந்து கொண்டாலே பாதுகாப்புக்கு போதுமானது. பிறகு கைகளை நன்கு சுத்தம் செய்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு பொறுப்பும் அரசுக்கே..
சூழலியல் செயல்பாட்டாளர் சுந்தர்ராஜன் கூறும்போது, "என்னுடைய புரிதல்படி முழுவிவரம் தெரியாமல் தன்னார்வாலர்கள் களத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 

இது போன்ற தருணங்களில், இதற்கென சிறப்பு வல்லுனர்கள் இருப்பார்கள் அவர்கள் இதை கையாள்வது நல்லது என்றுதான் கூறுவேன். ஏனெனில் இது அரசு செய்ய வேண்டிய வேலை, தன்னார்வலர்கள் செய்ய வேண்டியது அல்ல. அரசாங்கம்தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் அல்ல. 

ஒருவேளை தன்னார்வலர்கள் வர விரும்பினால் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கச்சா எண்ணெய் அகற்றுவதில் ஈடுபடலாம். அதற்காக வடிவமைக்கப்பட்ட கையுறைகள், ஆடைகள் அணிந்து அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுடன் செல்ல வேண்டும். ஏனென்றால் நிறைய தன்னார்வலர்கள் கூடும்போது அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்குமா என்பது தெரியாது அல்லவா? எனவே வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்



Tuesday, 1 March 2016

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!







வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.






தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- சுயேச்சை முதல்வர் சுப்பராயன்!

சுப்பராயன்














சுப்பராயன்
மதுவிலக்கு என்பது மக்களின் மனதுக்கு நெருக்கமான பிரச்சினை. அதைக் காங்கிரஸ் கையி லெடுத்துப் போராடினால் மக்கள் செல்வாக்கு பெருகும் என்றும் அதைக்கொண்டு நீதிக்கட்சியை வீழ்த்தலாம் என்றும் கணித்தார் ராஜாஜி. அதை சத்தியமூர்த்தி போன்றோர் ஏற்க மறுத்த போது, “மதுவிலக்கு கோரிப் போராடினால், வரும் தேர்த லில் உங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்” என்றார். ஆகட்டும் என்று தலையசைத்தனர் சுயராஜ் ஜியக் கட்சியினர்.
நீதிக்கட்சி அரசும் பல முற்போக்கான காரியங் களைச் செய்திருந்தது. முக்கியமாக, மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதியை நீக்கியது, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழக உருவாக்கம், 5 முதல் 12 வயது குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி போன்றவற்றைச் சொல்லலாம்.
ஆனால் தேர்தல் என்று வந்தபோது சுயராஜ்ஜியக் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே கடும் போட்டி. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியின்படி சுயராஜ்ஜியக் கட்சிக்காக ராஜாஜி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது நீதிக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டியவர், பெரியார். காங்கிரஸ் தொண்டராக இருந்த அவர், வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் இப்போது நீதிக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.
வழக்கம்போல,
“தேர்தலில்
வென்றால் ஆட்சியமைக்க மாட்டோம்” என்று பிரச்சாரம் செய்தது சுயராஜ்ஜியக் கட்சி. மாறாக,
“தேர்தலில் வென்று ஆட்சி நிர்வாகத்தைச் சிறப்பாகத் தொடர்வோம்” என்றது நீதிக்கட்சி. ஆனால் மக்களின் தீர்ப்போ நீதிக்கட்சிக்கு எதிராக வந்தது. வெற்றிபெற்ற 98 பேரில் 41 பேர் சுயராஜ்ஜியக் கட்சியினர். இருமுறை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சிக்கு வெறும் 21 இடங்களே கிடைத்தன. மிச்சமுள்ள 36 பேரும் சுயேச்சைகள்.
சென்னை மாகாணம் சந்தித்த விநோதமான தேர்தல் முடிவு அது. தனிப்பெருங்கட்சியான சுயராஜ்ஜியக் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். பிரிட்டிஷாரின் ஆட்சிமுறைக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவதே எங்கள் முதன்மைப் பணி என்று சொல்லிவிட்டது சுயராஜ்ஜியக் கட்சி. பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்பது நீதிக்கட்சியின் நிலைப்பாடு.
இந்த நிலையில் அரசியல் காட்சி மாற்றங்கள் நடந்தன. நீதிக்கட்சி சார்பில் வெற்றிபெற்ற பி.சுப்பராயன் திடீரென அதிலிருந்து விலகினார். சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்தார். அதன் பின்னணியில் சுயராஜ்ஜியக் கட்சி இருந்தது. 4 டிசம்பர் 1926 அன்று சென்னை மாகாணத்தில் சுயேச்சை முதல்வர் பி.சுப்பராயன் தலைமையில் புதிய சுயேச்சை அமைச்சரவை உருவானது. அதில் அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் இடம்பெற்றனர். இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர்கள்.
தேர்தல் அரசியலை எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் கட்சி, அடுத்த தேர்தலிலாவது நேரடியாகக் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்தது!
ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘மதுவிலக்கு’, ‘கச்சத்தீவு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?




வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.
இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும்

2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும்.

3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.

4. மெனுவில் whatsapp web என்ற தேர்வுக்குச் செல்லவும்.

5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR Code) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)

6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்